*விபத்து அபாயத்தால் அகற்ற கோரிக்கை
உடன்குடி : குலசேகரன்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் கொட்டி கிடக்கும் ஜல்லிக்கற்களால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர். கொட்டி கிடக்கும் ஜல்லி கற்களை அகற்ற வேண்டுமென வாகனஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். குலசேகரன்பட்டினம் -திருச்செந்தூர் செல்லும் கிழக்கு கடற்கரை சாலை, தற்போது முக்கியத்துவம் வாய்ந்த சாலையாக மாறி வருகிறது. இந்த சாலையையொட்டி தான் அனல்மின் நிலையம், துறைமுகம் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
தற்போது அனல்மின் நிலைய பணிகளுக்காக கல்லாமொழிக்கு நாள்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட லாரிகளில் மணல் மற்றும் கற்கள் கொண்டு செல்லப்பட்டு வருகிறது. இந்த லாரிகள் அளவுக்கு அதிகமான பாரங்களை ஏற்றிக் கொண்டு அதிக வேகத்துடன் செல்கிறது.
மேலும் கடந்த 2 நாட்களுக்கு முன்பு குலசேகரன்பட்டினம் காரைக்கால் அம்மையார் மண்டபம் அருகே லாரியில் கொண்டு சென்ற ஜல்லிக்கற்கள் அதிளவில் சாலையில் கொட்டி சிதறியது. தார் சாலையில் ஜல்லிகற்ககள் கொட்டிக் கிடப்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர்.
தொடர்ந்து பாதுகாப்பற்ற முறையில் மணல்களை ஏற்றிச் செல்வதால் மணல்கள் கொட்டி திட்டுகளாக மாறியுள்ளன. எப்போதும் போக்குவரத்து மிகுந்து காணப்படும் கிழக்கு கடற்கரை சாலையில் கிடக்கும் ஜல்லிக்கற்கள், மணல் திட்டுகளை அகற்றி வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்காத வண்ணம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
