*தொற்று நோய் பரவும் அபாயம்
விருதுநகர் : விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சுற்றுச் சுவர் அருகே வாறுகாலில் தேங்கி கிடக்கும் கழிவு நீரால் பெரும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.விருதுநகர் ராமமூர்த்தி சாலையில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.
இங்கு நாள்தோறும் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெளி நோயாளிகள் வந்து செல்கின்றனர். உள்நோயாளிகளாக சுமார் 500க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். உள் நோயாளிகளைப் பார்க்க ஏராளமான உறவினர்களும் மருத்துவமனைக்கு நாள்தோறும் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் மருத்துவமனையில் பிரதான நுழைவு வாயில் அருகே பெரிய வாறுகால் உள்ளது. அதில் கழிவு நீரானது தேங்கி கிடக்கிறது. சமீபத்தில் பெய்த மழை நீரும் இதனுடன் கலந்து செல்கிறது. திறந்த நிலையில் அந்த வாறுகால் உள்ளதால் அதிலிருந்து துர்நாற்றம் அடித்து வருகிறது.
இதனால், மருத்துவமனைக்கு வந்து செல்வோர் முகத்தை மூடிக் கொண்டு செல்லும் நிலை உள்ளது. எனவே, தேங்கி கிடக்கும் கழிவு நீரை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், தினசரி நூற்றுக் கணக்கானோர் மருத்துவமனைக்கு வந்து செல்கின்றனர். அப்போது வெளியே உள்ள வாறுகாலின் நாற்றம் தாங்க முடியாமல் பலர் அவதிப்படுகின்றனர். பலர் குழந்தைகளை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து வருகின்றனர்.
இதனால், குழந்தைகளுக்கு வேறு பல நோய்கள் தாக்கும் நிலை உள்ளது. மேலும், தேங்கிக் கிடக்கும் கழிவுநீரில் உருவாகியுள்ள கொசுக்களினால் இரவு நேரங்களில் மருத்துவமனை வளாகத்தில் கொசுத் தொல்லையும் அதிக அளவில் உள்ளது.
இதனால், மருத்துவர்கள், செவிலியர்கள் நோயளிகள் என அனைவரும் பாதிக்கப்படும் சூழல் உள்ளது. எனவே, தேங்கி கிடக்கும் கழிவு நீரை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.
