தங்கம் விலை மீண்டும் அதிகரிப்பு பவுன் ரூ.90,480க்கு விற்பனை
சென்னை: தங்கம் விலை நேற்று மீண்டும் அதிகரித்து பவுன் ரூ.90,480க்கு விற்பனையானது. தங்கம் விலை கடந்த மாதம் தொடக்கத்தில் இருந்து அதிரடியாக உயர்ந்து வந்தது. அதுவும் காலை, மாலை என ஒரு நாளைக்கு இரண்டு முறை தங்கம், வெள்ளி விலை உயர்வு என்பது இருந்து வந்தது. இதன் ஒரு பகுதியாக கடந்த 17ம் தேதி ஒரு பவுன் ரூ.97,600 என்ற இதுவரை இல்லாத வரலாற்று உச்சத்தை எட்டியது. இதே வேகத்தில் அதிகரித்தால் ஒரு பவுன் ரூ.1 லட்சத்தை தாண்டி விடும் சூழ்நிலை இருந்தது.
இந்நிலையில் கடந்த 18ம் தேதியில் இருந்து தங்கம் விலை குறைய தொடங்கியது. எப்படி விலை ஏற்றம் என்பது ராக்கெட் வேகத்தில் இருந்தோ அதே வேகத்தில் விலை சரிய தொடங்கியது. கடந்த 30ம் தேதி தங்கம் விலை காலையில் கிராமுக்கு ரூ.225, பவுனுக்கு ரூ.1,800ம் குறைந்தது. பின்னர் மாலையில் கிராமுக்கு ரூ.200, பவுனுக்கு ரூ.1,600 உயர்ந்து ஒரு பவுன் ரூ.90400க்கு விற்கப்பட்டது. நேற்று முன்தினம் தங்கம் விலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல் பவுன் ரூ.90,400க்கும் விற்றது.
வார இறுதி நாளான நேற்று தங்கம் விலையில் திடீர் மாற்றம் காணப்பட்டது. அதாவது கிராமுக்கு ரூ.10 அதிகரித்து, ஒரு கிராம் ரூ.11,310க்கும், பவுனுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு பவுன் ரூ.90,480க்கும் விற்பனையானது. அதே நேரத்தில் வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.165க்கும், பார் வெள்ளி 1 லட்சத்து 65 ஆயிரத்துக்கும் விற்றது. இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் மார்க்கெட்டுக்கு விடுமுறை. அதனால், நேற்றைய விலையிலேயே இன்று தங்கம் விற்பனையாகும். நாளை (திங்கட்கிழமை) மார்க்கெட் தொடங்கிய பின்னரே தங்கம் விலையில் என்ன மாற்றம் ஏற்பட போகிறது என்பது தெரியவரும்.