Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

புதிய உச்சத்தை தொட்டது தங்கம் விலை ஒரு சவரன் விலை ரூ.52 ஆயிரத்தை எட்டியது

சென்னை: சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.52,000க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளதால் பொதுமக்கள், நகை வாங்குவோர் கலக்கம் அடைந்துள்ளனர். திருமணம் உள்ளிட்ட பல்வேறு சுபநிகழ்ச்சிகளுக்கு தங்க நகைகள் வாங்குவது வழக்கமாக இருக்கிறது. மேலும் இந்தியாவில் தங்கம் சேமிப்பு ஆதாரமாக இருக்கிறது. இந்நிலையில் தங்கம் விலை யாரும் எதிர்பார்க்காத வகையில் கடந்த மாத இறுதியில் இருந்து தொடர்ந்து உயர்ந்து வருகிறது. தினம், தினம் புதிய உச்சம் என்ற அளவில் வரலாற்று உயரத்தையும் தொட்டு வந்தது.

தொடந்து கடந்த 28ம் தேதி தங்கம் விலை சவரன் ரூ.50 ஆயிரத்தை தொட்டது. 29ம் தேதி தங்கம் விலை மேலும் அதிரடியாக உயர்ந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சவரனுக்கு ரூ.1,120 உயர்ந்து ஒரு சவரன் ரூ.51,120க்கு விற்பனையானது.

ஜெட் வேகத்தில் அதிகரித்து வந்த தங்கம் விலை கடந்த 30ம் தேதி பெயரளவுக்கு குறைந்து சவரன் ரூ.50,960க்கு விற்பனையானது. இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை தங்கம் விலை கிராமுக்கு ரூ.85 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,455க்கும், சவரனுக்கு ரூ.680 உயர்ந்து ஒரு சவரன் ரூ.51,640க்கும் விற்கப்பட்டது.

ஆனால் நேற்று முன்தினம் கிராமுக்கு ரூ.25 குறைந்து ரு.6,430க்கும் சவரனுக்கு ரூ.200 குறைந்து ரூ.51,440க்கும் விற்றது. ஆயிரக்கணக்கில் விலையேற்றம் இருந்தாலும் வெறும் சில நூறுகளில் தான் விலை குறைவதாக வியாபாரிகள், மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இந்நிலையில் நேற்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது. ஒரு கிராம் தங்கம் ரூ.70 உயர்ந்து ரு.6,500க்கும் சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.52,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை தொடர்ந்து அதிகரிப்பதாலும், 50 ஆயிரத்துக்கு மேல் பணத்தை கொண்டு செல்லக்கூடாது என்ற தேர்தல் நடத்தை விதிமுறைகளால் நகை கடைகளில் விற்பனை குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.