தங்கம் விலை ஒரே நாளில் 2 முறை மாற்றம்; காலையில் ரூ.2400 அதிகரிப்பு, மாலையில் ரூ.800 குறைந்தது: வெள்ளியும் கிலோவுக்கு ரூ.10 ஆயிரம் உயர்ந்தது
சென்னை: தங்கம் விலை சில மாதங்களாக ஏற்றம், இறக்கத்துடன் காணப்படுகிறது. இந்நிலையில் நேற்று தங்கம் விலை ஜெட் வேகத்தில் அதிகரித்தது. அதாவது கிராமுக்கு ரூ.300 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.14,250க்கும், பவுனுக்கு ரூ.2,400 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 14,000க்கு விற்பனையானது.
நேற்று மாலையில் தங்கம் விலை பெயரளவுக்கு குறைந்தது. அதாவது, மாலையில் கிராமுக்கு ரூ.100 குறைந்து ஒரு கிராம் ரூ.14150க்கும், பவுனுக்கு ரூ.800 குறைந்து பவுன் ரூ.1 லட்சத்து 13,200க்கும் விற்றது. வெள்ளியும் நேற்று அதிரடி உயர்வை சந்தித்தது. அதாவது, நேற்று காலை வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.260க்கும், கிலோவுக்கு ரூ.10,000 உயர்ந்து, பார் வெள்ளி ரூ.2.60 லட்சத்துக்கும் விற்பனையானது. மாலையில் வெள்ளி விலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. பொதுவாக ஆடி மாதம் திருமணம் போன்ற விசேஷ தினங்கள் வருவது இல்லை. இதனால், இந்த மாதத்தில் நகை விற்பனை என்பது பெரிய அளவில் இருக்காது.
இந்த நிலையில் ஆடி மாதம் முடிய இன்னும் ஒரு வாரம் மட்டுமே உள்ளது. ஆடி மாதம் முடிந்து ஆவணி மாதம் பிறக்க உள்ளது. இந்த மாதத்தில் திருமணம் உள்ளிட்ட விஷேச தினங்கள் அதிக அளவில் நடைபெறும். இந்த நேரத்தில் நகை விலை உயர்ந்து வருவது நகை வாங்க காத்திருப்பவர்களுக்கு அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.



