Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

சூர்யா நடித்த கங்குவா படத்துக்கு தடை கோரி வழக்கு; பாக்கித்தொகை இன்று வழங்கப்படும்; தயாரிப்பு நிறுவனம் உத்தரவாதம்: உயர் நீதிமன்றத்தில் இன்று மதியம் மீண்டும் விசாரணை

சென்னை: நடிகர் சூர்யாவின் கங்குவா படத்துக்கு தடை கோரிய வழக்கில் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு வழங்க வேண்டிய பாக்கித் தொகை நாளை (இன்று) வழங்கப்படும் என்று ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் உறுதியளிக்கப்பட்டது. திரைப்பட தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, தனது ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில், டெடி-2, எக்ஸ் மீட்ஸ் ஓய், தங்கலான் பட தயாரிப்பு பணிகளுக்காக ரிலையன்ஸ் நிறுவனத்திடம் இருந்து 99 கோடியே 22 லட்சத்து 49 ஆயிரம் ரூபாய் கடன் பெற்றிருந்தார். இதில், 45 கோடியை திருப்பி செலுத்திய ஞானவேல் ராஜா மீதமுள்ள 55 கோடி ரூபாயை வழங்காமல் ஒப்பந்த விதிகளை மீறி செயல்பட்டுள்ளதாக குற்றம் சாட்டி ரிலையன்ஸ் நிறுவனத்தின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அந்த நிறுவனத்தின் மனுவில், இந்த தொகையை திருப்பித் தராமல் நடிகர் சூர்யா நடித்துள்ள கங்குவா திரைப்படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும். தங்கலான் படத்தை ஓ.டி.டி தளத்தில் வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் வழங்க வேண்டிய தொகையில் 18 கோடியை மேங்கோ மாஸ் மீடியா நிறுவனம் செலுத்தி விட்டதால், தங்கலான் படத்தை ஓ.டி.டி. தளத்தில் வெளியிட ஆட்சேபமில்லை என்று ரிலையன்ஸ் நிறுவனம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சதீஷ் பராசரன் தெரிவித்தார்.

அப்போது, ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜயன் சுப்பிரமணியன், மீதத்தொகை நாளைக்குள் (இன்று) வழங்கப்படும் என்று உறுதியளித்தார். இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, பாக்கித் தொகையை செலுத்தியது குறித்து தெரிவிக்கும் வகையில், வழக்கின் விசாரணையை இன்று பிற்பகலுக்கு தள்ளிவைத்தார். பணம் செலுத்தப்படும் பட்சத்தில், கங்குவா படம் திரைக்கு வர எந்த தடையும் இருக்காது எனத் தெரிகிறது.