பேராவூரணி: கோயில் திருவிழாவுக்கு சென்ற சிறுமி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார். இதுதொடர்பாக 3 சிறுவர்கள் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே விளங்குளம் கிராமத்தை சேர்ந்த பெண் ஒருவர், கணவருடன் கருத்து வேறுபாட்டால் பிரிந்து தனது 16 வயது மகளுடன் தனியாக வசித்து வருகிறார். நேற்றுமுன்தினம் விளங்குளம் கிராமத்தில் உள்ள பாட்டி வீட்டிற்கு சென்ற சிறுமி, இரவு அங்கு நடைபெற்ற கோயில் திருவிழாவிற்கு சென்றுள்ளார். அப்போது புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி பகுதியை சேர்ந்த சந்தோஷ் (24), சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி மறைவான பகுதிக்கு அழைத்து சென்று தனிமையில் இருந்துள்ளார்.
சிறுமியுடன் சந்தோஷ் சென்றதை பார்த்த திருவிழா பார்த்து கொண்டிருந்த அடைக்கதேவன் பகுதியை சேர்ந்த அரவிந்த் (20), அவரது நண்பர்களான சோலைக்காடு பகுதியை சேர்ந்த 18, 17, 16 வயதான 3 சிறுவர்கள் என 4 பேரும் பின்தொடர்ந்து சென்றுள்ளனர். பின்னர் சந்தோஷை அங்கிருந்து விரட்டிவிட்டு 4 பேரும் சேர்ந்து அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். பின்னர் சிறுமியை நேற்று அதிகாலை பேராவூரணியில் கொண்டுவந்து விட்டு சென்றனர். சிறுமி சோர்வாக இருந்ததை பார்த்த அவரது தாயார், இதுபற்றி விசாரித்த போது எந்தவித பதிலும் அளிக்காமல் இருந்துள்ளார்.
இதற்கிடையில், சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த விவகாரம் கிராமத்தில் உள்ள சிலருக்கு தெரிய வந்து அவர்கள் சேதுபாவாசத்திரம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். இதுதொடர்பாக சிறுமியிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், 5 பேர் சேர்ந்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. சிறுமியின் தாய் கொடுத்த புகாரின் பேரில் சோதுபாவாசத்திரம் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து சந்தோஷ், அரவிந்த் மற்றும் 3 சிறுவர்கள் ஆகியோரை கைது செய்தனர். இதுதொடர்பாக அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.



