சென்னை: வேலூர் காட்பாடியில் 60 படுக்கைகளுடன் கூடிய புதிய மருத்துவமனைக்கு டாக்டர் உள்ளிட்ட பணியாளர்கள் மற்றும் நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக சுகாதாரத்துறை செயலாளர் செந்தில்குமார் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது: வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா அரசு மருத்துவமனையில் 37 பணியிடங்களை உருவாக்க வேண்டும் என்றும், அதற்காக ரூ.2.1 கோடியில் 60 படுக்கைகள் அமைப்பதற்கான செலவினங்களை அனுமதித்து ஆணை வழங்க வேண்டும் என்றும் மருத்துவம் மற்றும் ஊரக சுகாதார பணி இயக்குநர் அரசிடம் கேட்டு கடிதம் எழுதியுள்ளார். இந்த கடிதத்தை அரசு கவனமுடன் பரிசீலித்து மேற்கண்ட வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா அரசு மருத்துவமனைக்கு 24 பணியிடங்களை உருவாக்கி அனுமதி அளித்துள்ளது. அதற்காக ரூ.1.2 கோடி நிதி மற்றும் ரூ.9 லட்சமும் செலவினங்களுக்கு அனுமதித்து அரசாணை வெளியிட்டுள்ளது.
+
Advertisement

