சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது: இலங்கைக் கடற்படையினரால் தமிழ்நாடு மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதையும் கைது செய்யப்படுவதையும் தடுக்க ஒன்றிய அரசு தலையிட்டு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டுமென நான் பல கடிதங்கள் எழுதியும் ஒன்றிய அரசு பாராமுகமாகவே உள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள நமது மீனவர்கள் 97 பேரையும் பிடித்து வைக்கப்பட்டுள்ள 216 படகுகளையும் விடுவிக்கக் கோரி, திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களும், தமிழ்நாட்டைச் சேர்ந்த பிற கூட்டணிக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று போராட்டம் நடத்தினர். ஒன்றிய அரசு உடனடியாக விழித்துக் கொண்டு, நமது மீனவர்களின் வாழ்வாதாரத்தைக் காக்க நிரந்தரத் தீர்வு காணவேண்டும் என கூறியுள்ளார்.
