புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி நேற்று தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம், ‘‘நீங்கள் எந்த கூட்டணியில் இடம் பெறுவீர்கள்’’ என்று செய்தியாளர்கள் கேட்டபோது, ‘‘கூட்டணி குறித்து பேசி வருகிறோம். வலுவான கூட்டணியில் இடம் பெறுவோம். புதிய தமிழகம் கட்சிக்கு தனித்தொகுதிகளில் மட்டுமல்லாது பொதுத்தொகுதிகளிலும் கணிசமான வாக்குகள் உள்ளது. இதனை கவனத்தில் வைத்து கூட்டணி பேசி வருகிறோம். தென்தமிழகத்தில் அதிகமான பிரதிநிதிகள் போட்டியிடுவோம்.
ஆட்சி அதிகாரத்தில் பங்கு பெறுவோம்’’ என்றார். ஆனால் கடைசி வரை எந்த கூட்டணியில் பேசி வருகிறோம் என்பதை சொல்ல மறுத்து விட்டார். அது ரகசியம் என்று கூறி கழுவுற மீன்ல...நழுவுற மீனு மாதிரி நழுவி சென்றுவிட்டார். ஒன்றிய பட்ஜெட் குறித்து கேட்ட போது, ‘‘தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்தை 125 நாளாக அதிகரித்துள்ளனர். ஆனால் அதற்கான நிதி ஒதுக்கீடு செய்யாததால் அந்த திட்டம் செயல்படுத்தப்படுமா என்பது கேள்விக்குறியாகி உள்ளது, என்றார்.


