Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

திரைப்படங்கள் வெளியான மூன்று நாட்களுக்கு விமர்சனங்களை சமூக வலைதளங்களில் வெளியிட தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு

சென்னை : திரைப்படங்கள் வெளியான மூன்று நாட்களுக்கு விமர்சனங்களை சமூக வலைதளங்களில் வெளியிட தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.நடிகர் சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான கங்குவா படம் குறித்து சமூக ஊடகங்களில் எதிர்மறை விமர்சனங்கள் வெளியாகின. இந்த பின்னணியில், படங்கள் வெளியான மூன்று நாட்களுக்கு விமர்சனங்களை வெளியிட தடை விதிக்கக் கோரி தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுவில், புதிதாக வெளியாகும் திரைப்படங்கள் குறித்து சமூக வலைதளங்களில் விமர்சனங்களை வெளியிடுவது தொடர்பாக விதிமுறைகளை வகுக்க மத்திய - மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும்.

பெரிய பட்ஜெட் படங்கள் வெளியாகும் போது, அவை குறித்து எதிர்மறை விமர்சனங்கள் வெளியிடப்படுவதால் படங்கள் தோல்வி அடைவதால், திரைத்துறையில் அசாதாரண சூழல் நிலவுகிறது என்று கூறப்பட்டுள்ளது. இந்த மனு நீதிபதி சவுந்தர் முன் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியன் ஆஜராகி, புதிதாக வெளியாகும் திரைப்படங்கள் குறித்து சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் வெளியாவதால், படத்தை பார்க்க விரும்பும் மக்களின் மனநிலை மாறுகிறது. படத்தில் நடித்த நடிகர், இயக்குனர் குறித்து அவதூறு பரப்பப்படுகிறது என்றார்.

இதையடுத்து நீதிபதி, அவதூறு பரப்புவது குறித்து காவல் துறையிடம் புகார் அளிக்கலாம். விமர்சனம் கருத்து சுதந்திரம் என்பதால், பொத்தாம் பொதுவாக உத்தரவு பிறப்பிக்க முடியாது. சில படங்கள் நல்ல விமர்சனங்களை பெறுகிறது.திரைப்படங்கள் வெளியான மூன்று நாட்களுக்கு விமர்சனங்கள் வெளியிட தடை விதிக்க முடியாது. இந்த வழக்கு தொடர்பாக நான்கு வாரங்களில் மத்திய - மாநில அரசுகள் மற்றும் யூ- டியூப் நிறுவனம் ஆகியவை பதில் தர உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தார்.