Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

தங்கு தடையின்றி உரம் விநியோகம் விவசாயிகளுக்கு நடப்பாண்டில் ரூ.7,666 கோடி பயிர்க்கடன்: அவதூறு பரப்புவோருக்கு அமைச்சர் கண்டனம்

சென்னை: தமிழ்நாடு கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினின் வழிகாட்டுதலின்படி, கூட்டுறவுத்துறையின் கீழ் செயல்படும் கூட்டுறவு சங்கங்கள் மூலம் தமிழ்நாடு முழுவதும் விவசாயிகளுக்கு தேவையான பயிர்க்கடனும் உரங்கள் தங்குதடையின்றியும் விநியோகிக்கப்பட்டு வருகின்றது.

கடந்த 2021-2022ம் ஆண்டில் 14,84,052 விவசாயிகளுக்கு ரூ.10,292 கோடி பயிர்க்கடனும், 2022-2023ம் ஆண்டில் 17,43,817 விவசாயிகளுக்கு ரூ.13,442 கோடி பயிர்க்கடனும், 2023-2024ம் ஆண்டில் 18,36,345 விவசாயிகளுக்கு ரூ.15,542 கோடி பயிர்க்கடனும் வழங்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில் 1.4.2024 முதல் 6.11.2024 வரை 8,62,544 விவசாயிகளுக்கு ரூ.7,666 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது. இதுசென்ற ஆண்டை விட ரூ.450 கோடி கூடுதலாகும்.

அதேபோன்று, விவசாயிகளுக்கு தங்குதடையின்றி உரம் அவர்களின் தேவைக்கேற்ப வழங்கப்பட்டு வருகின்றன. 1.4.2024 முதல் 6.11.2024 வரை 77,797 மெட்ரிக் டன் யூரியா, 41,119 மெட்ரிக் டன் டிஏபி, 18,490 மெட்ரிக் டன் எம்ஓபி, 70,116 மெட்ரிக் டன் காம்ப்ளெக்ஸ் உரங்களும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

தற்போது வரை 32,755 மெட்ரிக் டன் யூரியா, 16,792 மெட்ரிக் டன் டிஏபி, 13,373 மெட்ரிக் டன் எம்ஓபி, 22,866 மெட்ரிக் டன் காம்ப்ளெக்ஸ் உரங்கள் கூட்டுறவு சங்கங்களில் இருப்பில் வைக்கப்பட்டு, சிரமமின்றி பெற்றிட விநியோகம் செய்யப்படுகிறது. மேலும், தமிழ்நாட்டில் 4456 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. 26 வகையான கடன்கள் குறைந்த வட்டி விகிதத்தில் வழங்கப்பட்டு வருகிறது.

இச்சூழ்நிலையில், ஒரு சில அரசியல் தலைவர்கள் ஆதாயம் தேடுகின்ற வகையில் உண்மைக்கு புறம்பாக, அர்த்தமற்ற, அவதூறு செய்திகளை பரப்புவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். அவற்றை எல்லாம் பொதுமக்கள் புறம் தள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.