Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad cements
search-icon-img
Advertisement

கூட்டுறவு சங்கங்களின் இளநிலை ஆய்வாளர் பதவிகளுக்கு வரும் 22ம் தேதி 3ம் கட்ட கலந்தாய்வு: டிஎன்பிஎஸ்சி செயலாளர் அறிவிப்பு

சென்னை: கூட்டுறவு சங்கங்களின் இளநிலை ஆய்வாளர் பதவிகளுக்கு வரும் 22ம் தேதி மூன்றாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு, கலந்தாய்வு நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி செயலாளர் கோபால சுந்தரராஜ் அறிவித்துள்ளார். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-3 (குரூப் 3ஏ)-ல் அடங்கிய கூட்டுறவு சங்கங்களில் இளநிலை ஆய்வாளர், கூட்டுறவுத்துறை பண்டக காப்பாளர் (கிரேடு 2), தொழில் மற்றும் வர்த்தகத்துறை பதவிகளுக்கு நேரடி நியமனம் செய்யும் பொருட்டு விண்ணப்பங்களை கோரியிருந்தது.

இந்த பதவிக்கான எழுத்துத் தேர்வு 28.1.2023 அன்று நடத்தியது. எழுத்துத்தேர்வில் விண்ணப்பதாரர் பெற்ற மதிப்பெண் மற்றும் தரவரிசை விவரம் 31.8.2023 அன்று தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டு முதல் மற்றும் இரண்டாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டது. இந்நிலையில், கூட்டுறவு சங்கங்களில் இளநிலை ஆய்வாளர், கூட்டுறவுத்துறை பதவிக்கான மூன்றாம் கட்ட மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு வரும் 22ம் தேதி சென்னை பிராட்வேயில் உள்ள டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

கலந்தாய்வுக்கு அழைக்கப்படும் விண்ணப்பதாரரின் மதிப்பெண் ஒட்டுமொத்த தரவரிசை எண், இடஒதுக்கீட்டு விதி, காலிப் பணியிடங்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட பட்டியல் ஆகியவை தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. கலந்தாய்வுக்கான நாள், நேரம் மற்றும் விவரங்கள் அடங்கிய அழைப்புக் கடிதத்தை விண்ணப்பதாரர்கள் தேர்வாணைய இணையதளமான www.tnpsc.gov.inலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். கலந்தாய்வுக்கு அழைக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு அதற்கான விவரம் எஸ்எம்எஸ், இ-மெயில் மூலம் மட்டுமே தெரிவிக்கப்படும் என்று டிஎன்பிஎஸ்சி செயலாளர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.