ஜார்கண்ட் மாணவர்கள் போராட்ட விவகாரம்; நடிகை சோனாக்ஷிக்கு பாஜக ஐடி ‘விங்’ நெருக்கடி: தந்தை சத்ருகன் சின்ஹா பரபரப்பு குற்றச்சாட்டு
புதுடெல்லி: சமூகவலைதளங்களில் தனது மகள் சோனாக்ஷி சின்ஹாவுக்கு எதிராக நடைபெறும் எதிர்மறை பிரசாரங்களுக்கு பின்னணியில் பாஜக ஐடி விங் செயல்படுவதாக மூத்த நடிகரும், அரசியல்வாதியுமான சத்ருகன் சின்ஹா குற்றம் சாட்டியுள்ளார். பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா, சமூக மற்றும் அரசியல் சார்ந்த விவகாரங்களில் அவ்வப்போது தனது கருத்துக்களை வெளிப்படையாக பதிவு செய்து வருகிறார். ஆனால் ஜார்கண்ட் மாநிலத்தில் நடைபெற்ற மாணவர் போராட்டங்கள் குறித்து அவர் எந்தக் கருத்தும் தெரிவிக்காமல் அமைதி காப்பதாக கூறி, சமூகவலைதளங்களில் பலரும் கடுமையாக விமர்சித்து வந்தனர்.
இந்த நிலையில், ஊடகம் ஒன்றுக்கு சத்ருகன் சின்ஹா அளித்த பேட்டியில், ‘சோனாக்ஷி சின்ஹா ஏற்கனவே ஜார்கண்ட் மாணவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்தார். ஆனால் அவருக்கு எதிராக சமூக வலைதளத்தில் கடுமையான விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. இவை தன்னிச்சையான தாக்குதல்கள் அல்ல. பணம் கொடுத்து இயங்க வைக்கப்பட்ட போலி சமூக வலைதள கணக்குகள் மூலமே இந்த தாக்குதல்கள் நடைபெறுகின்றன. இதன் பின்னணியில் பாஜக ஐடி விங் இருக்கிறது’ என்றார்.



