Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

போலி ஆவணங்கள் மூலம் பதிவு செய்த 140 ஏக்கர் அரசு நிலம் பத்திரப்பதிவு ரத்து: புதுகை துணை பதிவாளர் நடவடிக்கை

திருமயம்: புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே புதுநிலைவயல் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 140 ஏக்கர் அரசு நிலம் உள்ளது. இந்த நிலத்தை அப்பகுதி மக்கள் மஞ்சுவிரட்டு திடலாக பயன்படுத்தி வருகின்றனர். இதனிடையே சம்பந்தப்பட்ட இடத்தை தனிநபர் ஒருவர் பல ஆண்டுகளாக கிரயம் செய்ய முயற்சி செய்து வருகிறார். இந்த பிரச்னைக்குரிய இடத்தை தனிநபர் இதற்கு முன் பலமுறை கிரயம் செய்தும், பின்னர் பத்திரம் ரத்து செய்து இருப்பதும் ஆவணத்தில் தெரியவந்துள்ளது.

இதனிடையே கடந்த மார்ச் மாதம் மீண்டும் பிரச்னைக்குரிய அரசு இடம் 140 ஏக்கர் புதுநிலைவயல் ஊராட்சிக்கு சம்பந்தமில்லாத தனி நபர் ஒருவர் போலி ஆவணங்கள் மூலம் பத்திரப்பதிவு செய்துள்ளதாக எழுந்துள்ள புகார் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இதனை அறிந்த புதுநிலைவயல் கிராமத்தை சேர்ந்த சிலர், கே.புதுப்பட்டியில் உள்ள கீழநிலை பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு ஆவணங்களுடன் நேற்று சென்றனர்.

அப்போது சம்பந்தப்பட்ட அரசு நிலம் எதன் அடிப்படையில் பத்திரப்பதிவு செய்யப்பட்டது என பணியில் உள்ள அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினர். பொதுமக்களின் கேள்வியை தொடர்ந்து அதிகாரிகள் பிரச்னைக்குரிய அரசு நிலத்தின் ஆவணங்களை ஆய்வு செய்ததில் அரசு நிலம் உரிய ஆவணம் இன்றி பத்திரப்பதிவு செய்துள்ளதாக முதல் கட்ட ஆய்வில் தெரியவந்தது.

இதனை தொடர்ந்து அதிகாரி பத்திரப்பதிவு செய்த நபரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். ஆனால் அவரோ வக்கீலிடம் ஆவணங்களை கொடுத்து அனுப்புவதாக தெரிவித்தார். இதுகுறித்து செய்தி கடந்த 8ம் தேதி தினகரன் நாளிதழில் வெளியானது. இதையடுத்து அதிகாரிகள் சம்பந்தப்பட்ட நபர்களை பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு வரவைத்து ஆவணங்களை சரிபார்த்தனர். இதில் பத்திரப்பதிவு செய்த நபர்களிடம் உரிய ஆவணங்கள் ஏதும் இல்லாததால் உடனடியாக அந்த பத்திரத்தை துணை பதிவாளர் ரத்து செய்தார்.