கடந்த மூன்றரை ஆண்டுகளில் தொழில்முனைவோரான 40,590 இளைஞர்கள்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் தகவல்
கல்லூரி மாணவர் புத்தாக்க கண்டுபிடிப்பிறகான போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்று முதல் இடம் பிடித்த 20 கண்டுபிடிப்புகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு தலா ₹1 லட்சம் வீதம் ₹ 20லட்சமும், 2ம் இடம் பெற்ற 20 கண்டுபிடிப்புகளுக்கு தலா ₹25,000 வீதம் ₹5 லட்சமும், 3ம் இடம் பெற்ற 20 கண்டுபிடிப்புகளுக்கு தலா ₹ 10,000 வீதம் ₹2 லட்சமும், பள்ளி புத்தாக்க மேம்பாட்டு திட்டத்தின் கீழ் புத்தாக்க கண்டுபிடிப்பிற்கான போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்று முதலிடம் பிடித்த 10 அணிகளுக்கு தலா ₹ 1 லட்சம் வீதம், ₹10 லட்சமும், 2ம் இடம் பெற்ற பத்து கண்டுபிடிப்புகளுக்கு தலா ₹25,000 வீதம் ₹2,50,000 ஆக மொத்தம் ரூபாய் 39.50 லட்சம் ரொக்க பரிசுகளை மாணவ மாணவிகளுக்கு அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன் மற்றும் மா.சுப்பிரமணியன் வழங்கினர்.
பின்னர் அமைச்சர் தா.மோ.அன்பரசன் கூறியதாவது:
தமிழ்நாட்டில் முதல்முறையாக தொழில்முனைவோருக்கு கல்லூரி உருவாக்கப்பட உள்ளது. 260 இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கக்கூடிய வகையில், 10,260 சதுர அடியில் ஒரு கோடியே 72 லட்சம் மதிப்பீட்டில் அந்தக் கல்லூரி இந்த ஆண்டு முதல் தொடங்கப்பட உள்ளது. அதற்கான இணைய வழி விண்ணப்பம் பெறப்பட்டு வருகிறது. வரவேற்பை பொறுத்து தமிழ்நாடு முழுக்க எண்ணிக்கை உயர்த்தப்படும். குறு, சிறு மற்றும் நடுத்தரத்தொழில் துறையின் மூலம் மூன்றரை வருடங்களில் ₹1,256 கோடி மானியம் தந்து, ₹3,768 கோடி வங்கி கடன் பெற்றுத்தந்து 40,590 இளைஞர்கள் புதிய தொழில் முனைவோராக உருவாக்கப்பட்டு தமிழ்நாடு முழுக்க சமச்சீரான தொழில் வளர்ச்சி ஏற்படுத்திய ஆட்சி திமுக தான். இவ்வாறு அவர் கூறினார்.