யானை வழித்தடங்கள் குறித்து மக்களிடம் கருத்து கேட்கப்படும்: உயர் நீதிமன்றத்தில் வனத்துறை தகவல்
சென்னை: தமிழகத்தில் யானைகள் வழித்தடங்கள் பாதுகாப்பது தொடர்பாக, விலங்குகள் நல ஆர்வலர் முரளீதரன் என்பவர் தாக்கல் செய்த வழக்கு, நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரதசக்கரவர்த்தி அடங்கிய சிறப்பு அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது வனத்துறை தரப்பில் சிறப்பு பிளீடர் டி.சீனிவாசன் ஆஜராகி, ஒருங்கிணைந்த யானைகள் வழித்தடங்களை கண்டறிந்து அதுபற்றிய விவரங்களை தாக்கல் செய்ய தமிழக அரசால் இரண்டு குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
யானை வழித்தடங்களாக அறிவிக்கப்பட்ட பகுதிகள் குறித்து அதிகாரிகள் மட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு அதை தொடர்ந்து நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் பொது மக்களிடம் கருத்து கூட்டம் நடத்தப்பட உள்ளது. பின்னர், யானை வழித்தடங்கள் தொடர்பான இறுதி அறிக்கை அடுத்தாண்டு பிப்ரவரியில் தமிழக அரசிடம் தாக்கல் செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார். இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இதுதொடர்பாக அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டு விசாரணையை வரும் 28ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.