Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

செங்கையில் ஏசி மெஷினில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் தீவிபத்து: கம்யூ. உள்பட பல லட்சம் பொருள் எரிந்து சேதம்

செங்கல்பட்டு: செங்கல்பட்டில் உள்ள, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் ஏசி மெஷினில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக திடீர் தீவிபத்து ஏற்பட்டது. இதில், கம்யூட்டர் உள்பட, பல லட்சம் பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தன. இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பும் பதட்டமும் ஏற்பட்டது. செங்கல்பட்டு வேதாசலம் நகரில் ஒரு வணிக வளாகத்தின் கீழ்தளத்தில் உதயகுமார் என்பவருக்கு சொந்தமான சூப்பர் மார்க்கெட்டும், மேல்தளத்தில் ஐஓபி வங்கியின் செங்கல்பட்டு நகர கிளை அலுவலகம் இயங்கி வருகிறது.

இந்த வங்கியில் நாள்தோறும் ஏராளமான வாடிக்கையாளர்கள் வங்கி பரிவர்த்தனைக்காக வந்து செல்கின்றனர். இந்நிலையில், மேல்தளத்தில் இயங்கி வரும் ஐஓபி வங்கி கிளை அலுவலகத்தில் நேற்று காலை 10 மணியளவில் திடீரென கரும்புகை எழுந்து, சிறிது நேரத்தில் தீப்பற்றி கொழுந்துவிட்டு எரியத் துவங்கியது. இதை பார்த்ததும் வங்கிக்குள் இருந்த ஏராளமான வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்கள் அலறியடித்தபடி வெளியே ஓடிவந்தனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, மக்களிடையே பெரும் பரபரப்பு நிலவியது.

இதுகுறித்து தகவலறிந்ததும் செங்கல்பட்டு நகர போலீசாரும் தீயணைப்பு நிலைய அலுவலர் தங்கதுரை தலைமையில் தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். இதைத் தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் சுமார் 2 மணி நேரத்துக்கு மேல் போராடி, ஐஓபி வங்கி கிளையில் ஏற்பட்ட தீயை முற்றிலும் அணைத்தனர். இதனால், வங்கியில் இருந்த வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்கள் எவ்வித காயங்களும் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

எனினும், இந்த விபத்தில், வங்கியில் இருந்த 2 கம்ப்யூட்டர்கள், சேர், டேபிள் உள்பட பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது. இந்த புகாரின்பேரில் செங்கல்பட்டு நகர போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் நடத்திய விசாரணையில், ஐஓபி வங்கி கிளையில் உள்ள ஏசி மெஷினில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டதாக தெரியவந்தது. எனினும், அங்குள்ள சிசிடிவி காமிரா பதிவுகளை ஆய்வு செய்து, பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர். இதனால் அங்கு 2 மணி நேரத்துக்கு மேல் பரபரப்பு நிலவியது.