டெல்லி: பீகார் மக்கள் வாக்குப்பதிவில் வரலாற்று சாதனை படைத்துள்ளோம் என பாஜக அலுவலகத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். 'பீகார் மக்களுக்கு இதயப்பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். பீகார் தேர்தலில் பெண்கள் மற்றும் இளைஞர்களின் வாக்குகளால் என்.டி.ஏ. கூட்டணி வெற்றி. இதுவரையிலான தேர்தல் வெற்றிகளை முறியடித்து புதிய சாதனையை படைத்துள்ளோம்' என பிரதமர் மோடி உரையாற்றினார்.
பீகார் சட்டசபை தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது. வெற்றியை நாடு முழுவதும் உள்ள பாஜக தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் கொண்டாடி வருகின்றனர். இதையடுத்து டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்துக்கு தொண்டர்கள், ஒன்றிய அமைச்சசர்கள் மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் வருகை தந்தனர். அமைச்சசர்கள் அமித்ஷா, நட்டா, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் பிரதமர் மோடிக்கு மலர் மாலை அணிவித்து கெளரவித்தனர்.
இதையடுத்து பிரதமர் மோடி உரையாற்றினார். அவர் ஆற்றிய உரையில் ;"மாபெரும் வரலாற்று தீர்ப்பை கொடுத்து, பீகார் மக்கள் அனைத்து தேர்தல் சாதனைகளையும் முறியடித்துவிட்டனர் பழைய சாதனையை முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளனர். மறைந்த ஜெய்பிரகாஷ் நாராயணன், கர்பூர் தாகூரை வணங்குகிறேன்.
இந்த மாபெரும் வெற்றி மற்றும் மக்களின் ஆதரவு, மாநிலத்தில் பெரிய புயலை ஏற்படுத்தியுள்ளது. நாங்கள் மக்களின் சேவகர்கள். எங்களின் கடின உழைப்பு மூலம் மக்களை மகிழ்ச்சி அடைய வைத்தோம். இதனால் மீண்டும் ஒரு முறை தேஜ கூட்டணி அரசை மக்கள் கொண்டு வந்துள்ளனர்.மாபெரும் வரலாற்று வெற்றியை அளித்துள்ள பீஹார் மக்களின் நலனுக்காக தேஜ கூட்டணி அரசு பாடுபடும்.
இந்தத் தேர்தல், தேர்தல் ஆணையத்தின் மீதான மக்களின் நம்பிக்கையை வலுப்படுத்தியுள்ளது. சமீபத்திய ஆண்டுகளில் தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது தேர்தல் ஆணையத்தின் மிகப்பெரிய சாதனையாகும்.
நக்சல் பாதித்த பகுதிகளில் 3 மணி வரை மட்டுமே ஓட்டுப்பதிவு நடந்த காலம் உண்டு. தற்போது மக்கள் பயமின்றி ஓட்டுப்போடுகின்றனர். அதிக எண்ணிக்கையில் ஓட்டு செலுத்தி ஜனநாயகம் மற்றும் தேர்தல் ஆணையம் மீதான நம்பிக்கையை வெளிபடுத்திய மக்களை நான் பாராட்டுகிறேன். பீகார் தேர்தல் நமது வாக்காளர்கள், குறிப்பாக இளைஞர்கள், வாக்காளர் பட்டியலின் துல்லியத்தை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்கிறார்கள் என்பதை உறுதிப்படுத்தியுள்ளன. புதுப்பிக்கப்பட்ட வாக்காளர் பட்டியலுக்கு பீகார் மக்கள் வலுவான ஆதரவைக் காட்டியுள்ளனர்" என உரையாற்றினார்.
