சென்னை: காவேரி மருத்துவமனையில் முதியோர் நலத்துறை, மூத்த குடிமக்களுக்கான சிகிச்சையில் ஒரு முழுமையான அணுகுமுறையை கையாள்கிறது. குறிப்பாக முதுமை நல மருத்துவர், இயன்முறை சிகிச்சை நிபுணர், உளவியல் மருத்துவர், உணவுமுறை மற்றும் ஊட்டச்சத்து நிபுணர் ஆகியோர் உள்ளடக்கிய மருத்துவக் குழு செயல்படுகிறது. இந்நிலையில் கூடுதலாக செவிலியர்கள், இயன்முறை சிகிச்சை நிபுணர் மற்றும் முதுமை நல மருத்துவரை உள்ளடக்கிய ஒரு குழுவின் வழியாக வீட்டிலேயே சிகிச்சை, பரிசோதனை மற்றும் பராமரிப்பு சேவைகளை தொடங்கி உள்ளது. அறுவை சிகிச்சைக்கு பிந்தைய பராமரிப்பு வழங்கல், காயத்திற்கான சிகிச்சை பராமரிப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய இந்த சேவை முதியோர்களின் குறிப்பான தேவைகளை திருப்திகரமாக பூர்த்தி செய்வதற்கென வடிவமைக்கப்பட்டிருக்கின்றன.
இதுதொடர்பாக ஆழ்வார்பேட்டை, காவேரி மருத்துவமனையின் முதியோர் நல சிறப்பு நிபுணர் டாக்டர் சுஷ்மிதா கூறியதாவது: தனிச்சிறப்பான சிகிச்சையும், பராமரிப்பும் தேவைப்படுகிறவாறு தனித்துவமான உடல்நல சவால்களை முதியோர் பெரும்பாலும் அடிக்கடி எதிர்கொள்கின்றனர். மருத்துவ கவனிப்பு மட்டுமன்றி உணர்வு ரீதியான ஆதரவையும் அவர்களது வீடு வழங்கும் சூழலிலேயே வழங்குவதற்காக இல்லம் சிகிச்சை பராமரிப்பு சேவைகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. மருத்துவமனைக்கு முதியோர் சிரமப்பட்டு செல்ல வேண்டிய தேவையை இச்சேவை அவசியமற்றதாக்கி விடுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.


