Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

ஈடி சோதனையில் போதை பொருள் பறிமுதல் விவகாரம் சிஎம்சி டாக்டரை பிடிக்க கேரள செல்லும் போலீஸ்: மேலும் பல மருத்துவர்கள் தொடர்பா?

வேலூர்: வேலூர் தோட்டப்பாளையம் பிள்ளையார் கோயில் தெருவில் உள்ள சிஎம்சி மருத்துவர்கள் குடியிருப்பில் உள்ளது. இந்த குடியிருப்பில் கேரளாவை சேர்ந்த டாக்டர் பிளிங்கின் மற்றும் 4 டாக்டர்கள் தங்கி இருந்தாக கூறப்படுகிறது. இந்நிலையில், டாக்டர் பிளங்கின் வங்கி பண பரிவர்த்தனை சட்டவிரோதமாக இருப்பதை அமலாக்கதுறையினர் கண்டுபிடித்தனர். இதையடுத்து அவர் தங்கியுள்ள குடியிருப்பில் அமலாக்கதுறை அதிகாரிகள் கடந்த 16ம் தேதி சோதனை நடத்தினர். இதில் 10 கிராம் மெத்தப்பட்டமைன் போதைப்பொருள், 100 கிராம் கஞ்சா, போதைக்கு பயன்படுத்தும் மாத்திரை, பவுடர் உள்ளிட்டவற்றை கைப்பற்றினர். அதோடு சில ஆவணங்களையும், கணினி உட்பட பல பொருட்களையும் அமலாக்கத்துறையினர் கைப்பற்றினர். போதை பொருட்களை டாக்டரே பயன்படுத்த வாங்கினாரா? அல்லது விற்பனை செய்கிறாரா? போதைப்பொருள் வியாபாரிகளிடம் பணப்பரிமாற்றம் நடந்துள்ளதா? போதை பொருள் எங்கிருந்து வாங்கினார்? என்பது குறித்து அமலாக்கத்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

போதைப்பொருள் பறிமுதல் குறித்து வேலூர் வடக்கு போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். இதுதொடர்பாக போலீசாரிடம் கேட்டபோது, ‘டாக்டரின் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளதால், போதை பொருள் கைப்பற்றப்பட்டது தொடர்பான விசாரணைக்காக டாக்டர் பிளிங்கினை கைது செய்து அழைத்து வர கேரள மாநிலம் செல்ல திட்டமிட்டுள்ளோம். இவ்விவகாரத்தில் டாக்டர் பிடிப்பட்டால்தான், போதை பொருள் விவகாரம் குறித்தும், அமலாக்கத்துறையின் வழக்கு குறித்தும், அவரோடு வேறு டாக்டர்களுக்கு தொடர்பு இருக்கிறதா? என்பது குறித்தும் தெரிய வரும்’ என்றனர்.