பெங்களூரு: மத்திய மண்டல அணியுடனான துலீப் கோப்பை முதல் அரையிறுதியில், தொடக்க வீரர்கள் அபிமன்யு ஈஸ்வரன் - வைபவ் சூரியவன்ஷியின் பொறுப்பான ஆட்டத்தால் கிழக்கு மண்டலம் முதல் இன்னிங்சில் 266 ரன் குவித்து ஆல் அவுட்டானது. பிசிசிஐ உயர் செயல்பாட்டு மைய வளாகத்தின் (சிஓஇ-1) முதல் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில், டாஸ் வென்ற கிழக்கு மண்டலம் முதலில் பந்துவீசஞ் மத்திய மண்டலம் முதல் இன்னிங்சில் 266 ரன் குவித்து ஆட்டமிழந்தது. அத்துடன் முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.
இரண்டாவது நாளான நேற்று, கிழக்கு மண்டலம் முதல் இன்னிங்சை தொடங்கி விளையாடியது. தொடக்க வீரர்களாக அபிமன்யு ஈஸ்வரன் - வைபவ் சூரியவன்ஷி களமிறங்கினர். சிறப்பாக விளையாடிய இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 25.2 ஓவரில் 161 ரன் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்தது.
சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சூரியவன்ஷி 92 ரன் (81 பந்து, 7 பவுண்டரி, 7 சிக்சர்) விளாசி ஹர்ஷ் துபே பந்துவீச்சில் அர்ஷத் கான் வசம் பிடிபட்டார். அடுத்து குமார் குஷக்ரா, சந்தித்த முதல் பந்திலேயே கோல்டன் டக் அவுட்டானார்.
ஈஸ்வரன் 69 ரன் (106 பந்து, 8 பவுண்டரி) எடுக்க, விராத் சிங் 5, கேப்டன் இஷான் கிஷன், அனுகுல் ராய் தலா 16 ரன், முகமது குரேஷி 13 ரன்னில் பெவிலியன் திரும்பினர். மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் அணிவகுக்க, கிழக்கு மண்டலம் 57 ஓவரில் 266 ரன் குவித்து அனைத்து விக்கெட்டையும் பறிகொடுத்தது. முகமது ஷமி 6 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். மத்திய மண்டல பந்துவீச்சில் ஹர்ஷ் துபே 16 ஓவரில் 1 மெய்டன் உள்பட 66 ரன்னுக்கு 4 விக்கெட் கைப்பற்றி அசத்தினார். ஆர்யன் பாண்டே, யஷ் தாகூர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.
இரு அணிகளும் முதல் இன்னிங்சில் தலா 266 ரன் எடுத்து சமநிலை வகித்த நிலையில், மத்திய மண்டலம் 2வது இன்னிங்சை தொடங்கியது. குணால் 2, ஆர்யன் ஜுயல் 8, கேப்டன் ரஜத் பத்திதார் 5 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தனர். மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் மத்திய மண்டலம் 3 விக்கெட் இழப்புக்கு 45 ரன் எடுத்துள்ளது. அமன் மொகாடே 23 ரன், ஆர்யன் பாண்டே 4 ரன்னுடன் களத்தில் உள்ளனர். கிழக்கு பந்துவீச்சில் முகேஷ் குமார் 2, முகமது ஷமி 1 விக்கெட் வீழ்த்தினர். இன்று கடைசி நாள் ஆட்டம் நடக்கிறது.
* காயம் காரணமாக ஓய்வெடுத்த இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஹர்திக் பாண்டியா, நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் மீண்டும் களமிறங்கத் தயாராகி உள்ளதாக பிசிசிஐ தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்களுக்கான உடல்தகுதி சோதனை விரைவில் நடைபெற உள்ளது. நட்சத்திர வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஆப்கான் தொடரில் பங்கேற்பது சந்தேகம் என்றாலும், ஆசிய விளையாட்டுப் போட்டியில் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.



