Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

போதைப்பொருள் விற்பனை செய்த துணை நடிகை மீனா கைது: வணிக வளாகத்திற்கு வந்தபோது சிக்கினார்

சென்னை: மெத்தபெட்டமைன் போதைப்பொருளை விற்பனை செய்த துணை நடிகை மீனா கைது செய்யப்பட்டுள்ளார். ஆர்யா நடித்த டெடி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தவர் மீனா. சேலத்தில் உள்ள இலங்கை தமிழர் முகாமைச் சேர்ந்தவர். கோவிலம்பாக்கம் கண்ணதாசன் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். எஸ்தர் என்ற இயற்பெயரை மீனா என மாற்றி, சினிமா மற்றும் சீரியலில் நடித்து வந்தார். இவர் ராயப்பேட்டையில் உள்ள வணிக வளாகத்திற்கு வந்துள்ளார். அப்போது அவரிடம் போதைப்பொருள் இருப்பதாக வந்த தகவலை அடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மீனாவிடம் சோதனை நடத்தியதில் அவர், 5 கிராம் மெத்தபெட்டமைன் போதைப் பொருள் வைத்திருந்தது கண்டறியப்பட்டது. இதனையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில், வாட்ஸ்அப் குழு மூலம் போதைப் பொருட்களை வாங்கி சக நடிகர், நடிகைகளுக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. ஒரு கிராம் ₹2 ஆயிரம் வீதத்தில் மெத்தபெட்டமைனை வாங்கி ₹3 ஆயிரத்துக்கு விற்பனை செய்ததாகக் கூறப்படுகிறது. யாரிடம் இருந்து போதைப்பொருளை வாங்கினார், யார் யாருக்கு விற்பனை செய்தார், போதைப்பொருள் விற்பனையை தனி ஆளாக செய்து வருகிறாரா அல்லது இதன் பின்னால் ஒரு கும்பல் உள்ளதா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர். அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த நடிகர், நடிகைகளிடமும் போலீசார் விசாரணை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கணவரை பிரிந்து வாழும் இவர் ஆடம்பர பிரியர். அதற்கான செலவுகளுக்காக போதை பொருளை விற்க தொடங்கினார் என்பது விசாரணையில் தெரிந்தது. மேலும், இவர் படப்பிடிப்பு இல்லாத நாட்களில் போதைப்பொருள் விற்பனை செய்து வந்துள்ளது தெரியவந்துள்ளது. குறிப்பாக திருமண விழாக்களிலும், ஓட்டல்களுக்கும் சப்ளை செய்துள்ளார். இதனால் துணை நடிகை மீனாவை காவலில் எடுத்து விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.