Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

பாகலூர் சர்க்கிள் பகுதியில் சிதிலமான சாலைகளால் வாகன ஓட்டிகள் அவதி

*சீரமைக்க கோரிக்கை

ஓசூர் : ஓசூர் அருகே பாகலூர் சர்க்கிள் பகுதியில் குண்டும், குழியுமான சாலைகளால் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.ஓசூர் அருகே பாகலூர் சர்க்கிள் ரவுண்டானா சாலை பேரிகை, மாலூர், சர்ஜாபுரம், ஓசூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்கிறது. இந்த சாலை வழியாக தினமும் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகிறது. இந்நிலையில் பாகலூர் சர்க்கிள் ரவுண்டானாவை சுற்றிலும் சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளது.

அதேபோல் ஓசூர், பேரிகை மற்றும் மாலூர் சாலைகளும் சிதிலமடைந்து, பல்வேறு இடங்களில் சாலை நடுவே ஒரு அடிக்கு பள்ளம் ஏற்பட்டுள்ளது. மேலும், கற்கள் பெயர்ந்து மண் சாலையாக மாறி புழுதி பறப்பதால், வாகன ஓட்டிகள் அவதியடைகின்றனர். பாகலூரிலிருந்து செல்லும் அனைத்து சாலைகளும் பழுதடைந்துள்ளதால், வாகன ஓட்டிகள் தினமும் சிறு சிறு விபத்தில் சிக்கி வருகின்றனர். வாகனங்கள் ஊர்ந்து செல்வதால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘வளர்ந்து வரும் பகுதியான பாகலூரையொட்டி, கர்நாடகா மற்றும் ஆந்திராவிற்கு செல்லும் பிரதான சாலைகள் உள்ளது. இதன் வழியாக தொழிற்சாலைகளுக்கு கனரக வாகனங்களில் உதிரி பாகங்கள் ஏற்றி செல்லப்படுகிறது.

அதேபோல் விவசாயிகள் விளைவிக்கும் காய்கறி மற்றும் மலர்களை வாகனங்களில் இந்த வழியாக கொண்டு செல்கின்றனர். பாகலூரிலிருந்து பல்வேறு முக்கிய நகரங்களுக்கு செல்லும் சாலைகள், கடந்த ஓராண்டுக்கு மேலாக சிதிலமடைந்து காணப்படுவதால், இதனை உடனடியாக சீரமைக்க வேண்டும்,’ என்றனர்.