போலியான நபர்களை நம்பி ஏமாற வேண்டாம்: பாஸ்போர்ட் சேவைகள் குறித்து இந்திய துணைத் தூதர் விஷ்ணு வர்தன் ரெட்டி விளக்கம்
துபாய்: துபாய் மற்றும் வடக்கு அமீரகங்களுக்கான இந்திய துணைத் தூதர் டாக்டர் இ. விஷ்ணு வர்தன் ரெட்டி, செய்தியாளர் சந்திப்பில் பாஸ்போர்ட் சேவைகள் குறித்து முக்கிய தகவல்களை பகிர்ந்தார். இந்திய பாஸ்போர்ட் சேவைகள் தற்போது புதிய Indian Consular Application Centres (ICAC) மூலம் வழங்கப்பட்டு வருகின்றன. சுதந்திர தினத்திற்கு முன்பாக, குறிப்பாக தட்கால் (Tatkal) விண்ணப்பங்களில் உள்ள நிலுவைகளை விரைந்து தீர்த்து, வழக்கமான சேவை காலத்திற்குள் கொண்டு வர தூதரகம் முன்னுரிமை அடிப்படையில் செயல்பட்டு வருகிறது என்றார்.
துபாயில் நேரடியாக (Walk-in) சேவை கீழ்க்கண்ட பிரிவினருக்கு வழங்கப்படுகிறது:
* தட்கால் (Tatkal) பாஸ்போர்ட் விண்ணப்பங்கள்
* புதிதாக பிறந்த குழந்தைகளுக்கான பாஸ்போர்ட்
* அவசர சான்றிதழ் (Emergency Certificate) தேவையுள்ளவர்கள்
பாஸ்போர்ட் சேவைக்கான முன்பதிவுகளை அதிகாரப்பூர்வ இணையதளமான consularsevainuae.com மூலமாக மட்டுமே மேற்கொள்ள வேண்டும் என்றும், போலியான நபர்களை நம்பி ஏமாற வேண்டாம் என்றும் அறிவுறுத்தினார். அனைத்து சேவைகளுக்கும் நிலையான சேவை கட்டணம் AED 19 மட்டுமே என்றும், இதற்கு மேல் கூடுதல் கட்டணம் எதுவும் இல்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
இந்தியாவின் 80-வது சுதந்திர தின விழா – சிறப்பு நிகழ்ச்சிகள் வரவிருக்கும் 80-வது இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்திய அரசு மேற்கொள்ளவுள்ள முக்கிய நிகழ்ச்சிகள் குறித்தும் அவர் விளக்கமளித்தார்.
ஹர் கர் திரங்கா (Har Ghar Tiranga) – ஆகஸ்ட் 9 முதல் 17, 2026 வரை தேசியக் கொடியுடன் செல்ஃபி அல்லது புகைப்படம் எடுத்து பொதுமக்கள் பங்கேற்கும் விழிப்புணர்வு இயக்கம்.
சூர்ய பாத் திரங்கா (Surya Path Tiranga) – உலகின் பல்வேறு நேர மண்டலங்களில் அமைந்துள்ள இந்திய தூதரகங்கள் மூலம், கிழக்கிலிருந்து மேற்காக சூரியன் பயணிக்கும் பாதையை ஒட்டி தேசியக் கொடி ஏற்றும் குறியீட்டு உலகளாவிய நிகழ்ச்சி.
‘வந்தே மாதரம்’ – 150 ஆண்டுகள் – தேசியப் பாடலை ஒருங்கிணைந்து பாடுதல் மற்றும் தேசபக்தி கலாச்சார நிகழ்ச்சிகள்.
‘பாரத் கோ ஜானியே’ (Bharat Ko Janiye) வினாடி வினா – சுதந்திர தின சிறப்பு பதிப்பு – வெளிநாடு வாழ் இந்தியர்கள் (NRIs), இந்திய வம்சாவளியினர் (PIOs) மற்றும் வெளிநாட்டு குடிமக்கள் இந்தியாவைப் பற்றி அறிந்து கொள்ளும் வகையில் நடத்தப்படும் போட்டி. இதில் வெற்றி பெறும் முதல் 5 பேருக்கு சுதந்திர தின விழாவில் துபாய் இந்திய துணைத் தூதரகத்தில் பாராட்டு வழங்கப்படும். முதல் பரிசு பெறுபவருக்கு சிறப்பு பரிசும் வழங்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.


