ஊத்தங்கரை: கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த மூன்றம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட கேத்துநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி (53). கேத்துநாய்க்கன்பட்டி திமுக கிளை செயலாளர். அப்பகுதியில் பொது இடத்தில் உள்ள திமுக கொடிக்கம்பத்தை அகற்றும் பணியில் நேற்று காலை திமுகவினர் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர் அப்போது எதிர்பாராதவிதமாக ராமமூர்த்தி உள்ளிட்ட 5 பேர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் படுகாயமடைந்த அனைவரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ராமமூர்த்தி உயிரிழந்தார். படுகாயமடைந்த கேத்துநாயக்கன்பட்டியை சேர்ந்த ஆறுமுகம் (58), பெருமாள் (49), முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பூபாலன் (50), சர்க்கரை (60) ஆகிய 4 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுபற்றி சிங்காரப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



