அண்மையில் திமுகவில் இணைந்த மைத்ரேயனுக்கு கட்சிப்பதவி
சென்னை: அண்மையில் திமுகவில் இணைந்த அதிமுக முன்னாள் எம்பி மைத்ரேயனுக்கு கட்சிப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அதிமுக முன்னாள் எம்பி மைத்ரேயன் கடந்த ஆகஸ்ட் 13ம் தேதி திமுகவில் இணைந்தார். இந்த நிலையில், அவரை திமுக கல்வியாளர் அணியின் துணைத் தலைவராக நியமித்து கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் நேற்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
அந்த அறிவிப்பில், “திமுக சட்டதிட்ட விதி:31, பிரிவு: 21ன் படி, திமுக கல்வியாளர் அணி துணைத் தலைவராக டாக்டர் வா.மைத்ரேயன் தலைமைக் கழகத்தால் நியமிக்கப்படுகிறார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மைத்ரேயனுக்கு திமுக நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.
அதிமுக சார்பில் 2002 முதல் மூன்று முறை மாநிலங்களவை உறுப்பினராக பதவி வகித்தவர் மைத்ரேயன். அந்த கட்சியின் அமைப்புச் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார். கடந்த மாதம் நடைபெற்ற மாநிலங்களவை தேர்தலில் அதிமுக சார்பில் மீண்டும் மாநிலங்களவை உறுப்பினர் பதவி கிடைக்கும் என மைத்ரேயன் எதிர்பார்த்த நிலையில், அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.