வெளி உலகம்லாம் தெரியாதுங்கோ... முந்தா நாளு பிறந்தவன் திமுகவுக்கு போட்டியா? அய்யோ... அய்யோ... அவமானமா இருக்கு: விஜய் டான்ஸ் ஆடுவது பார்த்து தலையில் அடித்துக்கொண்ட அமைச்சர்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் திமுக பொதுக் கூட்டத்தில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசியதாவது: முந்தாநாள் பிறந்தவன் எல்லாம் எனக்கும், திமுகவிற்கும் தான் போட்டி என்கிறான். செயல்வீரர்கள் கூட்டத்தில் டான்ஸ் ஆடுகிறார் பார்த்தீர்களா? தலையில் அடித்துக் கொண்டு அய்யோ, அய்யோ அவமானமாக இருக்கிறது. இவர்கள் கூட எல்லாம் அரசியல் நடத்திக் கொண்டு இருக்கிறோம். திட்டக் கூடாது என்று கூறுகிறீர்கள், எங்களால் திட்டாமல் இருக்க முடியவில்லை. கட்சியின் வயது 75. நாங்கள் பார்க்காத ஆளா, நாம் செய்யாத சாதனையா.
எல்லாரையும் பார்த்தோம், உன்னை பார்க்க மாட்டோமா? சின்ன பசங்கள் எல்லாத்தையும் கெடுத்தது, குட்டிச்சுவரா ஆக்குனது, படங்களில் மது குடிக்காமல், சிகரெட் குடிக்காமல் நடித்துள்ளாரா?. இளைஞர்களை எல்லாம் சீரழித்தது அந்த நடிகர் தான்.அரசியல் வேறு, நடிப்பு வேறு, படத்தை பார்க்கிறோம், கை தட்டுகிறோம். அதோடு முடிந்து பேச்சு விட்ரணும். ஒரு டிக்கெட் எவ்வளவு ரூ.2000.
சாதாரண, ஏழை பசங்க தான இலவசமாக கொடுத்து விட்டு போக வேண்டியது தானே... நீ வந்து மக்களை காப்பாற்ற போறீயா, நாட்டை காப்பாற்ற போறீயா. இதுவரை ஒரு தடவை கூட பாஜவை திட்டவில்லை, பாஜவுடன் ஒப்பந்தம் போட்டு வந்துள்ளார்கள், பாஜவை திட்டக் கூடாது. திமுகவிற்கு தான் அனைத்து சிறுபான்மை ஓட்டுகளும் வரப்போகுது, அதை கெடுத்து பிரிக்க வேண்டும் என்பதுதான் ஒப்பந்தம். நீ எந்த பக்கம் போனாலும் சரி.
சிறுபான்மை மக்கள் நம்பிக்கை வைத்துள்ள ஒரே கட்சி திமுக தான்.கலைஞர் காலத்தில் இருந்து திமுகதான் அவர்களுக்கு ஆதரவு. உங்கள் சூழ்ச்சி எல்லாம் தெரியாதா?. சிபிஐ வேண்டும் என்று கேட்டு விட்டு இப்போது மாட்டிக் கொண்டுள்ளார். ஒரு வாரத்தில் உன் கதை என்ன ஆகப்போகிறது என்று பார்? இவ்வாறு அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசினார்.
* ‘வெள்ளக் காக்காவ பார்க்க 3 கி.மீ. தூரம் கூட்டம் நின்னுச்சு’
‘‘காஞ்சிபுரத்தில் சில வருடங்களுக்கு முன்பு வெள்ளக் காக்கா தவறி வந்து விழுந்தது. அதை மருத்துவர்கள் எல்லாம் கூண்டில் போட்டு பார்வைக்கு வைத்தார்கள். அப்போது அதை பார்க்க 3 கிலோ மீட்டருக்கு தூரத்துக்கு கூட்டம் நின்றது. அதேபோன்று ஒரு நடிகர் ரோட்டுக்கு வந்தால் எப்படி இருப்பார், சினிமாவில் பார்த்த மூஞ்சு நேரில் பார்த்தால் எப்படி இருக்கும் என்று நம்ம ஆட்களும் தான் பார்ப்பார்கள், அதிமுககாரர்களும் தான் பார்ப்பார்கள், சினிமாவில் அழகா இருந்தாரே? நேரில் அசிங்கமாக இருக்கிறாரே என்று கூறுவார்கள்’’ என்று அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்தார்.
* விஜய்க்கு தெரிஞ்சது புஷி, குஷி, ருஷி... ரைமிங்கில் கலாய்க்கும் ‘பொள்ளாச்சி’
திருப்பூர் மாநகர் மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் சட்டப்பேரவை துணை சபாநாயகருமான பொள்ளாச்சி ஜெயராமன் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், ‘அதிமுகவை குறை சொல்லும் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு எதுவுமே தெரியாது.
அவர் செய்திதாள் படிப்பதில்லை, செய்தி தொலைக்காட்சிகள் பார்ப்பதில்லை, நிருபர்களை சந்திப்பது இல்லை. அதனால் அவருக்கு எதுவும் தெரிவதில்லை. அவர் எப்போது தூங்குகிறார், எப்போது எழுகிறார், என்ன செய்கிறார் என்பது கூட யாருக்கும் தெரியாது. அவர் பேசுவதெல்லாம் புஷி , குஷி, ருஷி ஆகியோரிடம் மட்டும் தான். அதனால் அவருக்கு வெளியுலகம் தெரியாது’ என்றார்.


