Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் மதுராந்தகம் தொகுதி நிர்வாகிகள் சந்திப்பு: இடைத்தேர்தல் குறித்து ஆலோசனை

சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை மதுராந்தகம் தொகுதிக்கு உட்பட்ட திமுக நிர்வாகிகள் நேற்று சந்தித்து பேசினர். அப்போது இடைத்தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாடு சட்டசபை தேர்தல் (2026) முடிவுகள் கடந்த மே மாதம் வெளியாகி விஜய் தலைமையிலான தவெக ஆட்சி நடைபெற்று வருகிறது. இதனிடையே, தேர்தல் முடிவுகள் வெளியான சில நாட்களிலேயே அதிமுகவில் இருந்து எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஜெயக்குமார் (பெருந்துறை), மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), சத்யபாமா (தாராபுரம்), இசக்கி சுப்பையா (அம்பாசமுத்திரம்), சி.விஜயபாஸ்கர் (விராலிமலை), எம்.ஆர்.விஜயபாஸ்கர் (கரூர்) ஆகியோரும் த.வெ.க.வில் இணைந்துள்ளனர்.

முதல்வர் விஜய் பெரம்பூர் எம்எல்ஏ பொறுப்பை ஏற்ற நிலையில் திருச்சி கிழக்கு தொகுதியை ராஜினாமா செய்தார். இதனால், அத்தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. மேலும் சட்டசபை தேர்தலில் அதிமுக வென்ற மதுராந்தகம், தாராபுரம், பெருந்துறை, அம்பாசமுத்திரம், விராலிமலை, கரூர் ஆகிய தொகுதிகளும் காலியானதாக அறிவிக்கப்பட்டது. ஆக மொத்தம் இதுவரை காலியாக அறிவிக்கப்பட்டுள்ள 7 தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவியுள்ளது. இதனால் இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து அரசியல் கட்சிகள் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகின்றன. இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திமுக மறுசீரமைப்புக் குழு நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நேற்று மதுராந்தகம் தொகுதிக்கு உட்பட்ட திமுக நிர்வாகிகள் நேரில் சந்தித்தனர். அப்போது இடைத்தேர்தலை எப்படி எதிர்கொள்வது என்பது உள்ளிட்ட தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இடைத்தேர்தல் தொடர்பாக திமுக நிர்வாகிகளுக்கு மு.க.ஸ்டாலின் பல்வேறு அறிவுரைகளை வழங்கினார். மேலும் இடைத்தேர்தல் நடைபெற உள்ள மற்ற தொகுதி நிர்வாகிகளையும் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேச திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.