திமுக கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம் ஒன்றிய அரசின் கைப்பாவை அதிமுக எஸ்ஐஆர் விவகாரத்திலும் மவுனம் காக்கிறது
*மாவட்ட செயலாளர் கவுதமன் குற்றச்சாட்டு
நாகப்பட்டினம் : சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் நமது வாக்குரிமையை பறிக்கும் ஒன்றிய அரசின் சதிதிட்டம் என தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர் கவுதமன் கூறினார்.மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தை கண்டித்து நாகப்பட்டினம் அவுரித்திடலில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நாகப்பட்டினம் நகர செயலாளரும், நகர்மன்ற தலைவருமான மாரிமுத்து வரவேற்றார். மாவட்ட செயலாளரும், தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழகத் தலைவருமான கவுதமன் தலைமை வகித்தார். நாகப்பட்டினம் எம்பி செல்வராஜ், கீழ்வேளூர் தொகுதி எம்எல்ஏ நாகைமாலி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் என்ற பெயரில் வாக்காளர்களின் வாக்குரிமையை பறிக்கும் செயலை கைவிட வேண்டும். தமிழர்களின் ஜனநாயக கடமையை பறிக்க முயற்சி செய்யும் தேர்தல் ஆணையத்தை கண்டிப்பது என்பது உள்ளிட்ட கோஷங்களை ஆர்ப்பாட்டத்தில் எழுப்பப்பட்டது.ஆர்ப்பாட்டத்தின் போது தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழகத்தலைவர் கவுதமன் பேசியதாவது:
சிறுபான்மை இன மக்களை நசுக்கும் முயற்சியில் ஒன்றிய அரசு தொடர்ந்து பல சட்டங்களை இயற்றியுள்ளது. இதன் தொடர்ச்சியாக சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் என்பதை ஒன்றிய அரசின் துணையுடன் தேர்தல் ஆணையம் கொண்டுவந்துள்ளது.இந்த திருத்தம் நமது வாக்குரிமையை பறிக்கும் ஒன்றிய அரசின் சதிதிட்டம் என்பதை தமிழக மக்கள் மறந்து விடக்கூடாது. ஒன்றிய அரசின் கைப்பாவையாக செயல்படும் அதிமுக அரசு எல்லாவற்றிற்கும் மவுனம் காப்பது போல் இதற்கும் மவுனம் காக்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் மாரிமுத்து, திக மாவட்ட செயலாளர் புபேஸ்குப்தா, மதிமுக மாவட்ட செயலாளர் ஸ்ரீதரன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் அருள்செல்வன், மக்கள் நீதி மய்யம் மாவட்ட செயலாளர் அனஸ், சிவசேனா கட்சி மாநில பொதுச்செயலாளர் சுந்தரவடிவேலன்,
திமுக மாவட்ட பொருளாளர் லோகநாதன், ஒன்றிய செயலாளர்கள் ராஜேந்திரன், செல்வசெங்குட்டுவன், தாமஸ்ஆல்வாஎடிசன், மகாகுமார், சரவணன், வேதாரண்யம் நகர செயலாளர் புகழேந்தி, மாவட்ட மீனவரணி துணை செயலாளர் மனோகரன் மற்று பலர் கலந்து கொண்டனர். நாகூர் நகர செயலாளரும், நகர்மன்ற துணைத்தலைவருமான செந்தில்குமார் நன்றி கூறினார்.