Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

மாவட்டத்தின் சுற்றுலாத்தலமான வைகை அணை பூங்கா பராமரிக்கப்படுமா?

*சுற்றுலா பயணிகள் எதிர்பார்ப்பு

ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி அருகே, வைகை அணைப் பூங்காவை முறையாக பராமரிக்க வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆண்டிபட்டி அருகே, மொத்தம் 71 அடி உயரம் கொண்ட வைகை அணை உள்ளது. இந்த அணையில் தண்ணீர் வெளியேறும் கீழ் பகுதியில் ஆற்றின் இருபுறம் வலது கரைப் பூங்கா மற்றும் இடது கரைப் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.

இதில், ஏராளமான பொழுது போக்கு அம்சங்கள் உள்ளன. விடுமுறை நாட்களில் தேனி மாவட்டம் மட்டுமல்லாமல் மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். மேலும் அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர்.பொழுதுபோக்கு அம்சங்கள்:

வலது கரைப் பூங்கா மற்றும் இடது கரைப் பூங்காக்களில், குழந்தைகள் விளையாடுவதற்கு ராட்டினம், ஏறிச் செல்வதற்கு குட்டி ரயில், சிறுவர் பூங்கா, பெரியாறு மாதிரி வைகைப் பூங்கா, மச்சக்கன்னி பூங்கா, பயில்வான் பார்க், யானை சறுக்கல், ஊஞ்சல், மலைகள் போல் அமைக்கப்பட்டு வரைபடங்கள், நீரூற்றுகள், புல் தரைகள், ஆங்காங்கே ஓய்விடங்கள், படகு குழாம், இசையுடன் தண்ணீர் நடனமாடும் வகையில் அமைக்கப்பட்டு இசை நடன நீரூற்று என ஏராளமான பொழுது போக்கு அம்சங்கள் உள்ளன.

பூங்காவிற்குள் செல்ல ஒரு நபருக்கு 5 ரூபாய் கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. காலை 7 மணிக்கு திறக்கப்படும் பூங்கா இரவு 7 மணி வரை இருக்கும்.

மின் விளக்குகள், விளையாட்டு பொருட்கள் சேதம்: இந்நிலையில் பூங்காவில் சிறுவர்கள் விளையாடும் ஊஞ்சல், சறுக்கல், ராட்டினங்கள் ஆகியவை சேதமடைந்து காணப்படுகின்றன. இதனால், சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் காயமடைகின்றனர். இதேபோல் பூங்காவில் உள்ள சிலைகளும் உடைந்து காணப்படுகின்றன.

மின்விளக்குகள் இல்லாததால் பூங்கா இருளில் முழ்கி கிடக்கிறது. பாதி இடங்களில் மின்விளக்குகளே இல்லை. காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை சுற்றுலாப் பயணிகளை அனுமதிக்கின்றனர். மாலை நேரத்தில் பூங்கா வெளிச்சம் இல்லாததால், சுற்றுலாப் பயணிகள் 5.30 மணிக்கெல்லாம் வெளியேறும் நிலை உள்ளது.

பராமரிப்பு இல்லாததாலும் மின்விளக்குகள் இல்லாததாலும் மாலை நேரத்தில் விஷபூச்சிகள் வருகின்றன. மதியம் வெயில் 4 மணிக்கு மேல் தான் இறங்கும். இதனால் சுற்றுலா பயணிகள் மாலை 5 மணிக்கு தான் பூங்காவிற்கு வருவார்கள். பூங்காவிற்கு வந்த சில நேரங்களிலேயே இருட்டி வருவதால், அப்போது மின்விளக்குகளும் இல்லாததால், உடனே பூங்காவை விட்டு வெளியேற வேண்டிய நிலை உள்ளது.

குவியும் பிளாஸ்டிக் கழிவுகள்: வைகை அணைப் பூங்காவில் சுமார் பத்துக்கும் மேற்பட்ட சிறுகடைகள் உள்ளன. சுற்றுலாப் பயணிகள் இந்த கடைகளில் தின்பண்டங்களை வாங்கி சாப்பிடுகின்றனர். பின்னர் பிளாஸ்டிக் பைகளை குப்பைத் தொட்டியில் போடாமல் அப்படியை நடைபாதையிலும், புல் தரைகளிலும் போட்டு செல்கின்றனர்.

இதனால் பூங்கா குப்பைகள் நிறைந்து காணப்படுகின்றன. மதுபான பாட்டில்களும் பூங்காவிற்குள் அதிகமாக காணப்படுகிறது. இங்கு பணிபுரியும் பணியாளர்களும், குப்பைகளை அகற்றுவதில்லை. இதனால் பூங்கா அழகு நிறைந்து காணப்படாமல் குப்பை கிடங்காய் காணப்படுகிறது. புல் செடிகளும் பராமரிப்பு செய்யாமல் அடர்ந்து வளர்ந்து கிடக்கிறது.

இது குறித்து சுற்றுலாப் பயணிகள் கூறுகையில், ‘பூங்காவுக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து சென்றாலும், பூங்காவில் போதுமான பராமரிப்புகள் இல்லை.

விளையாட்டுப் பொருள்கள் அனைத்தும் சேதமடைந்து கிடக்கிறது. சிலைகளும் சேதமடைந்து கிடக்கிறது. பூங்கா முழுவதும் மின்விளக்குகள் கிடையாது. இதனால் தினந்தோறும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் செல்கின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் வைகை அணை பூங்காவை முறையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.