திண்டுக்கல் குதிரையாறு அணையிலிருந்து 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட தமிழ்நாடு அரசு ஆணை..!!
சென்னை: திண்டுக்கல் குதிரையாறு அணையிலிருந்து 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டம், ஆண்டிபட்டி கிராமம், குதிரையாறு அணையின் இடது பிரதானக் கால்வாய் மற்றும் பழைய பாசனப் பரப்பு ஆகியவற்றுக்கு திண்டுக்கல் மாவட்டத்தில் 1981.59 ஏக்கர் நிலங்கள் மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் 882.27 ஏக்கர் நிலங்கள் ஆக மொத்தம் 2863.86 ஏக்கர் நிலங்கள் முதல்போக பாசனம் பெறும் வகையில் 10.12.2025 முதல் 08.04.2026 வரை 120 நாட்களுக்கு இடது பிரதானக் கால்வாய் வழியாக 103.68 மில்லியன் கன அடிக்கு மிகாமலும், ஆக மொத்தம் 5 அணைக்கட்டு பாசனப் பரப்பு மற்றும் நேரடி பாசனப்பரப்பிற்கு 165.89 மில்லியன் கன அடிக்கு மிகாமலும் ஆக மொத்தம் 296.53 மில்லியன் கன அடிக்கு மிகாமல் (நீரிழப்பு உட்பட) குதிரையாறு அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது. இதன்மூலம். திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டம், பாப்பம்பட்டி, சங்கராமநல்லூர் மற்றும் ஆண்டிபட்டி ஆகிய கிராமங்களிலுள்ள நிலங்களும் திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் வட்டத்திலுள்ள கொழுமம் கிராமத்திலுள்ள நிலங்களும் பாசனவசதி பெறும். இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.