டெல்லி சம்பவத்திற்கு ஒன்றிய அரசு பொறுப்பேற்க வேண்டும் தேர்தல் வரும்போதெல்லாம் குண்டு வெடிப்பு நடக்கிறது: செல்வப்பெருந்தகை சந்தேகம்
தூத்துக்குடி: டெல்லி குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு ஒன்றிய அரசு பொறுப்பேற்க வேண்டும். தேர்தல் காலங்களில் எல்லாம் குண்டுவெடிப்பு நிகழ்கிறது என தூத்துக்குடியில் காங்கிரஸ் மாநில தலைவர் செல்வபெருந்தகை தெரிவித்தார். தூத்துக்குடியில் உள்ள இல்லத்தில் நேற்று திமுக எம்பி கனிமொழியை, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை சந்தித்து பேசினர். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் எஸ்ஐஆர் எனும் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தம் இப்போது தேவையில்லை. ஒரே மாதத்தில் இதை செய்து முடிப்பது என்பது சாத்தியம் இல்லாதது.
இவர்கள் கொடுக்கும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்வது கடினமானது. 2002ல் எவ்வாறு விவரங்களை நிரப்பி கொடுத்தார்கள் என்பது யாருக்கும் தெரியாது. அவசர அவசரமாக செய்யும்போது, தகுதியானவர்களுக்கு வாக்கு இல்லாமல் செய்வதும், தகுதியற்றவர்களுக்கு வாக்குகள் வழங்குவதுமாக அமைந்து விடும். எனவேதான் இதுகுறித்து உச்சநீதி மன்றத்தை நாடியுள்ளோம். வாக்குரிமை என்பது மக்களுடைய அடிப்படை உரிமை.
அந்த உரிமையை முடக்குவதும் கேள்விக்குறியாக்குவதும், எதிர்க்கட்சிகளை எல்லாம் இதை சரிபாருங்கள் என்று தேர்தல் பணி செய்யவிடாமல் திசை திருப்புவதும் சரியல்ல. தேர்தல் காலங்களில் எல்லாம் குண்டுவெடிப்பு நிகழ்கிறது. 2019ல் காஷ்மீரில் இந்திய ராணுவ வீரர்கள் படுகொலை செய்யப்பட்டனர். அப்போதைய ஆளுநர் பல்வேறு கருத்துகளை கூறினார். அதனால் அவரை பல்வேறு வேதனைக்கு ஆளாக்கினார்கள்.
இவையெல்லாம் சந்தேகத்திற்குரிய நடைமுறையாக மக்கள் பார்க்கிறார்கள். டெல்லி குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு ஒன்றிய அரசு பொறுப்பேற்க வேண்டும். ஏதாவது ஒரு மாநிலத்தில் இதுபோன்ற சம்பவம் நடந்தால் அந்த அரசை பொறுப்பேற்க சொல்லும் பாஜ, இதற்கு ஏன் பொறுப்பேற்க தயங்குகிறது. பீகார் தேர்தலில் கருத்து திணிப்பு செய்துள்ளார்கள். பீகார் மக்கள் நல்ல தீர்ப்பு அளித்திருக்கிறார்கள். அது வாக்கு எண்ணிக்கையின்போது தெரிய வரும். இவ்வாறு அவர் கூறினார்.
