மின்சாரம் வாழ்க்கையின் ஒரு அத்தியாவசிய தேவையாகி உள்ள நிலையில் தடை செய்வதை ஏற்க முடியாது : டெல்லி ஐகோர்ட்
டெல்லி : மின்சாரம் வாழ்க்கையின் ஒரு அத்தியாவசிய தேவையாகி உள்ள நிலையில் தடை செய்வதை ஏற்க முடியாது என்று டெல்லி ஐகோர்ட் கருத்து தெரிவித்துள்ளது. டெல்லியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 3வது மாடியில் வசிக்கும் மைக்கி ஜெயின் என்பவர் வறுமை காரணமாக கடந்த 2 மாதங்கள் மின்சார கட்டணம் செலுத்த முடியாமல் இருந்துள்ளார். இரு மாதங்கள் கட்டணம் செலுத்தாமல் இருந்துள்ளதால் மின்சார சேவையை துண்டித்துள்ளது ராஜ்தானி நிறுவனம். இருப்பினும் அனைத்து மின் கட்டணத்தையும் செலுத்திய பிறகும் வீட்டு உரிமையாளரின் ஆட்சேபனை கடிதம் இல்லை என தெரிவித்து, ராஜ்தானி நிறுவனம் மின் இணைப்பை வழங்கவில்லை.
இதனை எதிர்த்து மைக்கி ஜெயின் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் உத்தரவு பிறப்பித்த நீதிபதி மினி புஷ்கர்னா, "மின்சாரத்தைப் பெறுவது, வாழ்வுரிமையின் ஒரு பகுதி; இந்திய அரசியலமைப்பின் 21வது பிரிவின் கீழ் மின்சாரம் பெறுவது அடிப்படை உரிமை. வீட்டு உரிமையாளர்-வாடகைதாரர் தகராறுகள் காரணமாக அடிப்படைத் தேவைகளை மறுக்க முடியாது. மனுதாரர் ஏற்கனவே அனைத்து கட்டணத்தையும் செலுத்திவிட்டதால் landlord NOC தேவையில்லை என்று கூறி, மின் இணைப்பை உடனடியாக வழங்க ராஜ்தானி நிறுவனத்திற்கு உத்தரவிடுகிறோம், "இவ்வாறு தெரிவித்தது.


