மரணமடைந்த கிராம உதவியாளர் வாரிசுகளுக்கு பணி வழங்க முதல்வர் உத்தரவு: அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்.ராமச்சந்திரன் தகவல்
சென்னை: சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது திருத்துறைப்பூண்டி கே.மாரிமுத்து(இந்திய கம்யூனிஸ்ட்) பேசுகையில், “வருவாய் துறையில் உள்ள 14 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராம உதவியாளர்கள் வரையறுக்கப்பட்ட கால முறை ஊதியத்தின் கீழ் கொண்டு வரப்படுவார்களா? என்றார்.
இதற்கு பதில் அளித்து வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் பேசுகையில், “பணி நியமனம் செய்யும் போதே சிறப்பு காலவரைமுறை ஊதியத்தில் தான் பணி நியமனம் செய்துள்ளனர். வருவாய்த்துறையில் மட்டும் அல்ல மற்ற துறைகளிலும் இதே நிலைதான். முதல்வரிடம் பேசி கால முறை ஊதியத்தினை மாற்றுவது குறித்து முடிவு எடுக்கப்படும். கிராம உதவியாளர்கள் மரணம் அடைந்தால் இதுவரை அவர்கள் வாரிசுகளுக்கு பணி வழங்கப்படுவதில்லை. கிராம உதவியாளர்கள் மரணம் அடைந்தால் அவர்கள் வாரிசுகளுக்கு பணி வழங்க 10 நாளுக்கு முன்பு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்” என்றார்.
