Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தருமபுரம் ஆதீனத்திற்கு மிரட்டல் பாஜ மாவட்ட தலைவர் ஜாமீன் மனு தள்ளுபடி: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: மயிலாடுதுறை தருமபுரம் ஆதினத்திற்கு மிரட்டல் விடுத்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் கைதான பாஜக நிர்வாகி அகோரத்தின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மயிலாடுதுறை தருமபுரம் ஆதினத்தின் 27வது தலைமை மடாதிபதியான ல மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் தொடர்புடைய ஆபாச வீடியோ மற்றும் ஆடியோ இருப்பதாக கூறி வினோத், செந்தில், விக்னேஷ் ஆதீனத்திற்கு மிரட்டல் விடுத்ததாக ஆதீனத்தின் உதவியாளர் காவல்துறையில் புகார் கொடுத்தார்.

புகாரின் அடிப்படையில் செம்பனார்கோவிலை சேர்ந்த தனியார் கல்வி நிறுவனங்களின் தாளாளர் குடியரசு, மயிலாடுதுறை மாவட்ட பா.ஜ.க தலைவர் அகோரம், மதுரையை சேர்ந்த வக்கீல் ஜெயச்சந்திரன் ஆகியோர் மீது மயிலாடுதுறை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் கடந்த மார்ச் மாதம் அகோரம் கைது செய்யப்பட்டார். இதையடுத்து, தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி டி.வி.தமிழ் செல்வி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அகோரத்திற்கு எதிராக 47 வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் அவருக்கு ஜாமீன் வழங்க கூடாது எனவும் காவல்துறை சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, மனுதாரர் அகோரத்தின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.