Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கலர், கலராக காலிஃபிளவர் சாகுபடி; கொடைக்கானலில் அசத்தும் விவசாயி

கொடைக்கானல்: கொடைக்கானலில் கலர், கலராக காலிஃபிளவர் சாகுபடி செய்து விவசாயி ஒருவர் அசத்தி வருகிறார். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் மலைகளின் இளவரசி என அழைக்கப்படுகிறது. பிரசித்தி பெற்ற இந்த சுற்றுலாத் தலத்திற்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். இது தவிர கொடைக்கானல் மலைக்கிராமங்களில் விவசாயம் முக்கியத் தொழிலாக உள்ளது. இங்கு உருளைக்கிழங்கு, காலிஃபிளவர், கேரட், பீன்ஸ், பீட்ரூட் உள்ளிட்ட மலைக்காய்கறிகள் அதிகளவில் பயிரிடப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் செண்பகனூர் மலைக்கிராமத்தை சேர்ந்த பிரபு என்ற விவசாயி வெளிநாட்டில் இருந்து காலிஃபிளவர் கலர் விதைகளை வாங்கி வந்து தனது நிலத்தில் பயிரிட்டுள்ளார். இவை தற்போது ஊதா, ஆரஞ்சு, மஞ்சள் உள்ளிட்ட நிறங்களில் காலிஃபிளவர் விளைந்துள்ளது. இதை பொதுமக்களும் சுற்றுலாப் பயணிகளும் விரும்பி வாங்கிச் செல்கின்றனர். இது குறித்து விவசாயி பிரபு கூறுகையில், ‘வெள்ளை நிற காலிஃபிளவரை விட பல வண்ணங்களில் விளையும் காலிஃபிளவர் நல்ல சுவையாக இருக்கிறது. ஊதா, ஆரஞ்சு, மஞ்சள் உள்ளிட்ட பல கலர்களில் விளையும் காலிஃபிளவர் நல்ல லாபம் கொடுக்கிறது’ என்றார்.