Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

டாஸ்மாக் கடை சுவரில் ஓட்டை போட்டு ரூ.1 லட்சம் மதிப்புள்ள மது பாட்டில்கள் திருட்டு: மர்ம நபர்களுக்கு வலை

ஊத்துக்கோட்டை: பெரியபாளையம் அருகே டாஸ்மாக் கடையின் சுவரில் ஓட்டை போட்டு ரூ.1 லட்சம் மதிப்புள்ள மது பாட்டில்களை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். பெரியபாளையம் அருகே தாமரைப்பாக்கம்-செங்குன்றம் சாலையில் அரசு டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடையை வழக்கம்போல் கடையின் சூப்பர்வைசர் தேவேந்திரன் மற்றும் விற்பனையாளர் ஏழுமலை ஆகியோர் பூட்டிவிட்டுச் சென்றனர்.

பின்னர் நேற்று முன்தினம் வழக்கம் போல் கடையை திறந்தனர். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது கடையின் பின்பக்க சுவரில் ஓட்டை இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். கடையில் இருந்த 13 கேசில் இருந்த 624 மது பாட்டில்களும், 126 விலை உயர்ந்த மதுபானங்கள் என 750 மதுபாட்டில்களை கொளையடித்துச் சென்றுள்ளனர் என்பது தெரிய வந்தது. அதன் மதிப்பு ரூ.1.11 லட்சம் ஆகும். இதுகுறித்து சூப்பர்வைசர் தேவேந்திரன் வெங்கல் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

அதன்படி ஊத்துக்கோட்டை டிஎஸ்பி சாந்தி மற்றும் வெங்கல் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் ஆகியோர் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தி மர்ம நபர்களை தேடி வருகிறார்கள். சம்பவம் நடந்த டாஸ்மாக் கடையில் சிசிடிவி கேமரா உள்ளது. ஆனால் கொள்ளை நடந்த அன்று பெஞ்சல் புயல் காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருந்தது. இதனால் கொள்ளை நடந்தது சிசிடிவி கேமராவில் பதிவாகவில்லை என கூறப்படுகிறது.