Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

சிவகங்கை அருகே திமுக நிர்வாகி வெட்டிக்கொலை: 3 பேர் கைது

சிவகங்கை: சிவகங்கை அருகே சாமியார்பட்டியைச் சேர்ந்தவர் பிரவீன் குமார்(27). திமுக விளையாட்டு மேம்பாட்டு பிரிவின் மாவட்டத் துணை அமைப்பாளர். ரியல் எஸ்டேட் மற்றும் கான்ட்ராக்ட் தொழில் செய்து வந்தார். நேற்று பிற்பகல் பிரவீன்குமார், சாமியார்பட்டியில் உள்ள அவரது தோப்பில் இருந்தார். அப்போது டூவீலரில் வந்த ஒரு கும்பல், பிரவீன்குமாரை சரமாரியாக அரிவாளால் வெட்டி விட்டு தப்பிச் சென்றது. பிரவீன்குமாரின் அலறல் சத்தத்தை கேட்ட அருகில் இருந்தவர்கள், அவரை மீட்டு, சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்த தகவல் அறிந்ததும் அவரது உறவினர்கள் மருத்துவமனையில் குவிந்தனர். அவர்கள் கொலையாளிகளை கைது செய்ய வலியுறுத்தி சிவகங்கை-மானாமதுரை சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மறியலில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து எஸ்பி ஆசிஸ்ராவத் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். இக்கொலை சம்பவம் குறித்து சிவகங்கை நகர் போலீசார் வழக்குப்பதிந்து, சாமியார்பட்டியைச் சேர்ந்த விக்கி (எ) கருணாகரன்(20), சிவகங்கையை சேர்ந்த பிரபாகரன்(19), திருப்பத்தூர் நரசிங்கபுரத்தைச் சேர்ந்த குரு(21) ஆகிய 3 பேரை கைது செய்தனர். முன்விரோதம் காரணமாக கொலை நடந்ததா அல்லது வேறு ஏதும் காரணமா என தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.