Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நான் இறந்து விட்டால் யார் காப்பாற்றுவது? மனைவியை கொன்று சடலத்துடன் 12 மணி நேரம் இருந்த கணவன்

கருங்கல்: மனைவியை கொன்று சடலத்துடன் 12 மணி நேரம் இருந்த கணவனால் பரபரப்பு ஏற்பட்டது. குமரி மாவட்டம் கருங்கல் அருகே படுவூர் காட்டுவிளையை சேர்ந்தவர் டார்வின் (46). அந்த பகுதியில் உள்ள மர அறுவை ஆலையில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவருக்கும் பாலப்பள்ளம் குருசுமிக்கேல் வைத்தியர் மகள் பவிதா நித்யசெல்வி (39) என்பவருக்கும் திருமணமாகி 9 மற்றும் 7 வயதில் 2 குழந்தைகள் உள்ளனர். இதில் ஒரு குழந்தைக்கு சற்று மனநலம் பாதிக்கப்பட்டு மார்த்தாண்டம் பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வருகிறது. மற்றொரு குழந்தை பவிதா நித்யசெல்வியின் தாய் வீட்டில் இருந்து வருகிறது. பவிதாவிற்கும் சற்று மனநலம் பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் டார்வின் மது குடித்து விட்டு மனைவியிடம் அடிக்கடி தகராறு செய்துள்ளார். நேற்று முன்தினம் காலை மது அருந்திவிட்டு வந்த டார்வின் பபிதாவை தாக்கியதில் அவர் இறந்தார். இது குறித்து கருங்கல் போலீசார் வழக்குப்பதிந்து டார்வினை கைது செய்தனர்.

முதற்கட்ட விசாரணையில் கொலை தொடர்பாக டார்வின் முன்னுக்கு பின் முரணாக பல்வேறு காரணங்களை கூறுவதாக போலீசார் தெரிவித்தனர். இது குறித்து போலீசார் கூறுகையில், இறந்த பவிதா நித்யசெல்வியின் தந்தை ருசுமிக்கேல் வைத்தியர், மகள் மற்றும் மருமகனுக்கு அப்பகுதியில் வீடு கட்டி கொடுத்துள்ளார்.

போதையில் வரும் டார்வின் பித்து பிடித்தது போல் தன்னை சிலர் கொல்ல முயல்வதாக அடிக்கடி கூறி வந்துள்ளார். சம்பவத்தன்றும் அவர் தன்னை சிலர் கொலை செய்ய முயல்வதாகவும், நான் இறந்து விட்டால் மனைவி என்ன செய்வாள்? என்று எண்ணி மனைவியை அடித்து கொன்றதாகவும் கூறுகிறார். மனைவியை கொலை செய்து சடலத்துடன் சுமார் 12 மணி நேரம் டார்வின் இருந்துள்ளார்.மனைவியை போல் டார்வினுக்கும் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதா? அல்லது கொலைக்கு வேறு காரணம் உள்ளதா? என்று விசாரணை நடக்கிறது.

இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.