Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

வாழப்பாடி அருகே குடும்ப தகராறில் விபரீதம் 2 மகள்களை கொன்று கர்ப்பிணி தற்கொலை

*கிணற்றில் சடலங்கள் மீட்பு

வாழப்பாடி : வாழப்பாடி அருகே குடும்ப தகராறில் 2 மகள்களை கிணற்றில் வீசி கொன்று விட்டு 7 மாத கர்ப்பிணி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகேயுள்ள நெய்யமலை அக்கரைப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ரவி (35). விவசாய கூலி தொழிலாளி. இவரது மனைவி மாதம்மாள் (30). இவர்களுக்கு மனோரஞ்சனி (7), நித்தீஸ்வரி (3) என 2 மகள்கள் இருந்தனர்.

தற்போது மாதம்மாள் 7 மாத கர்ப்பிணியாக இருந்தார். கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப பிரச்னை இருந்து வந்தது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு ஏற்பட்ட பிரச்னையால் மாதம்மாள் கோபித்து கொண்டு, தனது 2 குழந்தைகளுடன் தாய் வீட்டிக்கு சென்றார். பின்னர் சமாதானமடைந்த மாதம்மாள் குழந்தைகளுடன் கணவர் வீட்டுக்கு வந்தார். கடந்த 23ம்தேதி வீட்டில் இருந்த மாதம்மாள் மற்றும் 2 குழந்தைகளை காணவில்லை. அவர்களை நண்பர்கள், உறவினர்கள் வீடுகள் மற்றும் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இந்நிலையில் நேற்று அதிகாலை 3 மணியளவில் ரவியின் வீட்டின் அருகேயுள்ள விவசாய கிணற்றில் மாதம்மாள், 2 குழந்தைகளின் சடலம் அழுகிய நிலையில் மிதந்தது. இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் தகவல் தெரித்ததன் பேரில் ரவி மற்றும் அவரது குடும்பத்தினர் சென்று பார்த்தபோது அவர்கள் சடலமாக கிடந்ததை பார்த்து கதறி அழுதனர்.

தகவலறிந்த ஏத்தாப்பூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, மாதம்மாள் மற்றும் 2 குழந்தைகளின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தினர். விசாரணையில், விவசாய கூலி வேலைக்கு சென்று வந்த ரவி, அடிக்கடி லேட்டாக வீட்டுக்கு வருவாராம்.

இதனால், வேலை முடிந்து வீட்டுக்கு வராமல் எங்கே சென்றுவிட்டு வருகிறாய் எனக்கேட்டு மாதம்மாள் ரவியுடன் அடிக்கடி சண்டை போட்டு வந்துள்ளார். இதில் அவர்களுக்குள் தகராறு எற்பட்டு மோதல் வந்துள்ளது. தன்னிடம் கணவர் உண்மையை மறைக்கிறார் என்ற வேதனையில், அவர் கோபித்துக் கொண்டு கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு அக்கரைப்பட்டியில் உள்ள தாய் வீட்டுக்கு சென்றுள்ளார்.

பின்னர் சமாதானமடைந்து மீண்டும் கணவர் வீட்டுக்கு வந்த மாதம்மாள் இதே தகராறில் மனமுடைந்து, குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்றுவிட்டு, தானும் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இருவருக்கும் திருமணமாகி பத்தாண்டுகளை கடந்த நிலையில், போலீசார் தற்கொலை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.