சோழிங்கநல்லூர்: சென்னை கொடுங்கையூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் வலி நிவாரணி மாத்திரைகளை சிலர் போதைக்காக விற்பனை செய்வதாக கொடுங்கையூர் இன்ஸ்பெக்டர் சரவணனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் நேற்று முன்தினம் வியாசர்பாடி, எம்கேபி நகர், முல்லை காம்ப்ளக்ஸ் பகுதிகளில் சோதனை நடத்தினர்.
அப்போது ஒரு வீட்டில் 254 வலி நிவாரணி மாத்திரைகள் பதுக்கி வைத்திருந்தது தெரிந்தது. அவற்றை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக ஜீவா (25) என்பவரை கைது செய்தனர். இவர் கொடுத்த தகவலின்படி வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகர் ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்த பாலாஜி பாபு (26) என்பவரை கைது செய்தனர்.
பாலாஜி பாபு, கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு ஆன்லைனில் வலிநிவாரணி மாத்திரைகளை ஆர்டர் செய்துள்ளார். இதற்காக 12 ஆயிரம் ரூபாய் செலுத்தி, பாட்னாவில் இருந்து மாத்திரைகளை கூரியர் மூலம் பெற்றுள்ளார். பின்னர், ஒரு மாத்திரை 300 ரூபாய் என விற்றுள்ளார். இதற்கு ஜீவாவும் துணையாக இருந்துள்ளார். இவர்கள் இருவர் மீதும் 2 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதையடுத்து கைது செய்யப்பட்ட பாலாஜி பாபு, ஜீவா ஆகியோரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

