பழநி: பணமோசடி தொடர்பான புகாரை போலீசார் விசாரித்து கொண்டிருந்தபோது, அதிமுக நிர்வாகிக்கு திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், பழநி அருகே எல்லமநாயக்கன்புதுரை சேர்ந்தவர் அயூப்கான் (49). அதிமுக ஒன்றிய அவைத்தலைவர். இவர் கடந்த 2024ம் ஆண்டு நெய்க்காரப்பட்டியை சேர்ந்த ஜாகிர் உசேன் (56) என்பவரிடம் தனது மகனின் கல்வி செலவுக்காக ரூ.19 லட்சம் வங்கி பரிவர்த்தனை மூலம் கடனாக பெற்றதாகவும், இதனை திருப்பி தரவில்லை என்றும் கூறப்படுகிறது.
மேலும் பணத்தை திருப்பி கேட்ட ஜாகிர் உசேனுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் தெரிகிறது. இதுகுறித்து ஜாகிர் உசேன் பழநி தாலுகா போலீசில் புகார் செய்தார். இதன்பேரில் போலீசார் அயூப்கானிடம் நேற்று விசாரணை நடத்தினர். இதில் குற்றம் உறுதி செய்யப்பட்டதால் அயூப்கானை கைது செய்ய போலீசார் முற்பட்டனர். அப்போது அவர் திடீரென நெஞ்சு வலிப்பதாக கூறி அலறினார். இதையடுத்து போலீசார் அவரை பழநி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.



