சிவகங்கை: சிவகங்கை அருகே, திருமண்பட்டியை சேர்ந்தவர் சந்திரன். இவரது மனைவி ரஞ்சிதா (23). இவர்களது மகள்கள் கீர்த்தி (4), சங்கீதா (3). சந்திரன் கம்பி கட்டும் தொழில் செய்து வருகிறார். கணவன், மனைவி இடையே குடும்ப தகராறு இருந்து வந்தது. நேற்று முன்தினம் காலையும் இருவருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதன் பின்னர் சந்திரன் வேலைக்காக வெளியூர் சென்று அங்கேயே தங்கி உள்ளார்.
இந்நிலையில் அருகில் உள்ள திருமலை கிராமப் பகுதியில் ரஞ்சிதா நேற்று சுற்றித் திரிந்துள்ளார். இதை அறிந்து சந்திரன் செல்போனில் விசாரித்தபோது 2 குழந்தைகளையும் நேற்று முன்தினம் இரவு கீழப்பூங்குடி அய்யனார் கோவில் அருகே கிணற்றில் தள்ளி கொலை செய்ததாக தெரிவித்துள்ளார். புகாரின்படி மதகுப்பட்டி போலீசார் சென்று கிணற்றில் கிடந்த இரு குழந்தைகளின் சடலங்களையும் மீட்டனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், ரஞ்சிதாவை கைது செய்தனர்.