Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

குடும்பத்துடன் சென்னை சென்று திரும்பிய தனியார் பள்ளி நிர்வாகியின் வீட்டில் 1.15 கிலோ தங்கம், ரூ.50 லட்சம் கொள்ளை: ஊழியர்கள், காவலாளிகளிடம் விசாரணை

ஆலங்குளம்: ஆலங்குளம் அருகே தனிதென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே அடைக்கலபட்டனத்தைச் சேர்ந்தவர் ராஜசேகர். இவர் நெல்லை - தென்காசி பிரதான சாலையில் தனியார் மெட்ரிக் பள்ளி, சிபிஎஸ்இ பள்ளி மற்றும் பிஎட் கல்லூரி ஆகியவற்றை நடத்தி வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன் அவர் குடும்பத்துடன் சென்னையில் நடைபெற்ற உறவினர் இல்ல திருமண விழாவுக்கு சென்றுள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் காலை வீடு திரும்பிய போது, பீரோவை உடைத்து சுமார் 1 கிலோ 150 கிராம் தங்க நகைகள் மற்றும் ரூ.50 லட்சம் ரொக்கம் ஆகியவை கொள்ளை போயிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுபற்றி ஆலங்குளம் காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. தகவலறிந்த தென்காசி எஸ்பி அரவிந்த் தலைமையில் போலீசார் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

இதைத்தொடர்ந்து கொள்ளையரை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. கல்வி நிறுவன வளாகத்தில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தாலும், ராஜசேகரின் வீட்டில் சிசிடிவி கேமராக்கள் இல்லை.

இதையடுத்து பிரதான நுழைவாயிலில் இருந்த சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்தபோது, சந்தேகப்படும்படியான நபர்களின் நடமாட்டம் எதுவும் அதில் பதிவாகவில்லை. ராஜசேகர் குடும்பத்தினர் வீட்டில் இல்லாததை நன்கு அறிந்த மர்ம நபர்கள், நள்ளிரவில் சுற்றுச்சுவரை ஒட்டியிருந்த பெரிய மரத்தில் ஏறி, மாடி வழியாக வீட்டுக்குள் நுழைந்துள்ளனர். பின்னர் அங்கிருந்த பீரோவை உடைத்து கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். வீட்டில் பதிவான ரேகைகளை ஏற்கனவே உள்ள குற்றவாளிகளின் கைரேகைகளுடன் ஒப்பிட்டு பார்க்கும் பணி நடைபெற்று வருகிறது. பள்ளி உரிமையாளர் ராஜசேகரிடம் போலீசார் நேற்று கொள்ளை போன பொருட்கள் குறித்த தகவல்களை சேகரித்தனர். பின்னர் பள்ளி, கல்லூரி ஊழியர்கள், காவலாளிகளிடம் தனித்தனியாக துருவி, துருவி விசாரணை நடத்தினர். இந்த விசாரணைக்கு பிறகு முக்கிய தடயங்கள் சிக்கியுள்ளதால் விரைவில் கொள்ளையர்கள் பிடிபடுவர் என்று போலீசார் தெரிவித்தனர்.