Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கூடலூரில் பரபரப்பு வீடு புகுந்து நள்ளிரவில் மூதாட்டி கழுத்தை நெரித்த மர்ம நபர் ஓட்டம்

*போலீசார் தீவிர விசாரணை

கூடலூர் : நீலகிரி மாவட்டம், கூடலூர் நந்தட்டி திருவள்ளுவர் நகர் பகுதியில் வசிப்பவர் அன்னலட்சுமி (70). கணவரை இழந்த இவர், மகள்கள் வெளியூரில் வசிப்பதால் வீட்டில் தனியாக வசித்து வருகிறார். கூடலூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாளராக வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு சுமார் 11 மணியளவில் உறங்க சென்றுள்ளார்.

வீட்டில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது கையில் ஏதோ ஒன்று ஊர்வதைபோல் அறிந்து திடுக்கிட்டு திடீரென எழுந்துள்ளார். அப்போது ஒரு நபர் வீட்டுக்குள் இருக்கவே நீ யார் எப்படி இங்கு வந்தாய்? என்று சத்தம் போட அந்த நபர் ஒரு கையால் அவரது கழுத்தை பிடித்துக்கொண்டு மற்றொரு கையால் செல்போனை எடுத்துள்ளார். உடனடியாக சுதாரித்துக்கொண்ட அன்னலட்சுமி சத்தமிட அந்த நபர் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். அக்கம்பக்கத்தினர் சத்தம் கேட்டு ஓடி வந்து தப்பியோடிய நபரை தேடி உள்ளனர்.

இது குறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டதை அடுத்து கூடலூர் இன்ஸ்பெக்டர் சாகுல் ஹமீது தலைமையில் போலீசார் அப்பகுதியை கண்காணித்து, மர்ம நபரை தீவிரமாக தேடினர்.

தொடர்ந்து, போலீசார் ஆய்வில், மர்ம நபர் வீட்டின் பின்புற கதவை உடைத்து உள்ளே புகுந்தது தெரியவந்துள்ளது. கூடலூர் டிஎஸ்பி வசந்தகுமார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினார். சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. இதையடுத்து மர்ம நபரை பிடிக்க இரவு நேரத்தில் அப்பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

பொதுமக்கள் தரப்பில் கூறுகையில், ‘‘கூடலூர் பகுதியில் இரவு நேரத்தில் மர்ம நபர்களின் நடமாட்டம் உள்ளது. காட்டு யானை ஒன்று நடமாடி வருகிறது. இதன் காரணமாக வீடுகளில் இருப்பவர்கள் இரவு நேரத்தில் வெளியில் வருவதில்லை என்பதால், மர்ம நபர்கள் நடமாட்டத்திற்கு வசதியாக உள்ளதாகவும், வீடுகளில் முன்புறம் எரியும் பல்புகளை திருடி செல்வதாகவும் தெரிவித்தனர்.