பெரம்பூர்: அயனாவரம் பி.இ கோயில் தெரு, வடக்கு மாட வீதியை சேர்ந்தவர் சுதாகர் (50). இவரது மனைவி நவமணி (40). இவர்களுக்கு சுவாதி (25), சுகாசினி (21) ஆகிய 2 மகள்கள் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு கஞ்சா போதையில் 3 பேர் சுதாகர் வீட்டிற்குள் நுழைந்து அவரை கத்தியால் வெட்ட பார்த்தனர். சுதாகரின் இளைய மகள் சுகாசினி ஓடி வந்து தடுத்துள்ளார். இதில் அவருக்கு 4 இடங்களில் வெட்டு விழுந்தது. அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வருகிறார்.
போலீசார் விசாரணையில், வில்லிவாக்கம் சாமியார் தோட்டம் பகுதியை சேர்ந்த ரவி பிரசாத் (26), அயனாவரம் பட்டாச்சாரியார் தெருவை சேர்ந்த சக்திவேல் (26), ஆயிரம் விளக்கு பகுதியை சேர்ந்த சத்யநாராயணன் (29) ஆகிய 3 பேர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. சக்திவேல் முன்விரோத தகராறில் தனது நண்பர்களுடன் சேர்ந்து, சுதாகர் மகளை கத்தியால் வெட்டியது தெரிந்தது. இதையடுத்து, அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

