Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

தமிழகம் முழுவதும் கடந்த 25 நாட்களில் பொதுமக்களிடம் பணம் பறிக்கும் 10 லட்சம் மோசடி எஸ்எம்எஸ் லிங்க் தடுத்து நிறுத்தம்: சைபர் க்ரைம் கூடுதல் டிஜிபி சந்தீப் மிட்டல் தகவல்

சென்னை: தமிழகம் முழுவதும் கடந்த 25 நாட்களில் பொதுமக்களிடம் பணம் பறிக்கும் வகையில் மோசடி நபர்கள் மூலம் அனுப்பப்பட்ட 10 லட்சம் மோசடி எஸ்எம்எஸ் லிங்க்குகள் தனியார் தொலைத்தொடர்பு நிறுவன உதவியுடன் தடுத்து நிறுத்தப்பட்டதாக சைபர் க்ரைம் கூடுதல் டிஜிபி சந்தீப் மிட்டல் தெரிவித்துள்ளார். நகர்ப்புற மற்றும் கிராமப்புற பகுதிகளில் ஆன்லைன் மோசடி அச்சுறுத்தல் அதிகரித்துள்ளது. பிஷிங் இணைப்புகள், போலி டெலிவரிகள் மற்றும் போலி வங்கி எச்சரிக்கைகள் மூலம் மோசடி செய்பவர்கள் பொதுமக்களை குறிவைத்து பணம் பறிக்கும் நிகழ்வு தற்போது அதிகமாயுள்ளது.

சென்னை, கோவை, திருச்சி, சேலம் மற்றும் மதுரை, நீலகிரி, விழுப்புரம் மற்றும் ராமநாதபுரம் போன்ற நகரங்களில் வாழும் பொதுமக்களை தான் சைபர் மோசடி கும்பல் அதிகவில் குறிவைத்து பணம் பறிக்கும் செயல்களில் ஈடுபட்டு வருவதாக மாநில சைபர் க்ரைம் தெரிவித்துள்ளது. இந்த மோசடிகள் வயதான மூத்த குடிமக்கள், இல்லத்தரசிகள், மாணவர்கள், ஸ்மார்ட் போன் பயன்படுத்தும் நபர்களை குறிவைத்து ஓய்வூதிய பணம் சேமிப்பு, குறைந்த விலையில் வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை, பகுதி நேர வேலைவாய்ப்புகள், பிரபலமான நபர்கள் ஏஐ தொழில் நுட்பம் மூலம் உதவி கேட்பது போன்ற வீடியோக்கள் மூலம் சைபர் மோசடி நபர்கள் எஸ்எம்எஸ் மூலம் மோசடி லிங்க்குகள் அனுப்பி அதன் மூலம் வங்கி கணக்கு விபரங்களை முடக்கி பணம் பறித்து வருகின்றனர்.

இதனால் தமிழ்நாடு சைபர் க்ரைம் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் உதவியுடன் மோசடி நபர்கள் பொதுமக்களுக்கு எஸ்எம்எஸ் மூலம் பணம் பறிக்கும் மோசடி லிங்க்குகளை அனுப்புவதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். அந்த வகையில் பொதுமக்களுக்கு மோசடி லிங்க்குகள் அனுப்பி அது பொதுமக்களுக்கு சென்று அடைவதை தடுத்து நிறுத்தும் பணியில் மாநில சைபர் க்ரைம் வெற்றி பெற்றுள்ளது.

இதுகுறித்து மாநில சைபர் க்ரைம் கூடுதல் டிஜிபி சந்தீப் மிட்டல் கூறியதாவது:

தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்தில் எஸ்எம்எஸ் மெசேஜி மூலம் சைபர் குற்றவாளிகள் அதிகளவில் லிங்க்கள் பொதுமக்களுக்கு அனுப்புகின்றனர். அந்த எஸ்எம்எஸ் லிங்கை பொதுமக்கள் ‘கிளிக்’ செய்தால் சிறிது நேரத்தில் சம்பந்தப்பட்ட செல்போனில் ஏபிகே பைல் ஒன்று டவுன்லோடு ஆகும். அது டவுன்லோடு ஆனதும் சம்பந்தப்பட்ட நபரின் வங்கியின் ரகசிய எண் உள்ளிட்ட விபரங்கள் அனைத்து சைபர் குற்றவாளிகள் கையில் ெசன்றுவிடும்.

இதுபோன்ற மோசடிகளை தடுக்க தமிழ்நாடு சைபர் க்ரைம் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம். அதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் அதிகளவில் பயண்படுத்து தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் உதவியை நாங்கள் நாடினோம். அதன்படி சைபர் குற்றவாளிகள் பணம் பறிக்கும் வகையில் பொதுமக்களுக்கு அனுப்பும் மோசடி எஸ்எம்எஸ் லிங்க்கள், சம்பந்தப்பட்ட பொதுமக்களுக்கு சென்று அடையாமல் நவீன தொழில் நுட்ப உதவியுடன் இடை மறித்து தடுத்து நிறுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளோம்.

அந்த வகையில் தமிழகம் முழுவதும் கடந்த 15 நாட்களில் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனம் உதவியுடன் 10 லட்சம் (1 மில்லியன்) எஸ்எம்எஸ் லிங்க்கள் இடை மறித்து நிறுத்தியுள்ளோம். இந்த விஷயத்தை நாங்கள் ஒன்றிய அரசின் தொலைத்தொடர்பு துறையின் கவனத்திற்கு கொண்டு செல்கிறோம். இந்த நடவடிக்கை தொடரும். சைபர் குற்றவாளிகள் 3 நிலைகளில் இயங்குகின்றனர். குறைந்த மோசடிகளில் ஈடுபடும் மோசடி குழுக்கள் உள்நாட்டுகளில் இருந்து செயல்படுகின்றனர். இந்தியாவில் ராஜஸ்தான், பரத்பூர், மதுரா, அரியானா மற்றும் ஜார்க்காண்ட் மாநிலத்தில் இருந்தும் இவர்கள் செயல்படுகின்றனர். அதேபோல் டிஜிட்டல் கைது, மார்க்கெட்டிங் மோசடி போன்றவை சர்வதேச சைபர் குற்றவாளிகள் செய்கிறார்கள்.

அவர்கள் கம்போடியா, வியட்னாம், மியன்மார் போன்ற நாட்களில் இருந்து நேரடியாக மோசடிகளில் ஈடுபடுகிறார்கள். இந்த சர்வதேச மோசடி நபர்களுக்கு இந்தியாவில் உதவ அவர்கள் ஏஜென்சிகள் வைத்துள்ளனர். அந்த ஏஜென்சிகள் என்ன செய்கிறார்கள் என்றால், வங்கி கணக்குகள், சிம்கார்டுகளை முடக்குகிறார்கள். முடக்கப்பட்ட வங்கி கணக்குகள் மற்றும் சிம்காடுகளை வெளிநாடுகளுக்கு கொண்டு செல்கின்றனர். இதுபோன்ற மோசடிகளை தடுக்க நாங்கள் தற்போது ‘அபரேஷன் ஹைத்ரா’ மூலம் ஒன்றிய அரசு உதவியுடன் தனிப்படையினர் வெளிநாடுகளுக்கு சென்று சிம்கார்டுகள் மற்றும் வங்கி கணக்குகளை முடக்கிய ஏஜென்சிகளை சேர்ந்த சைபர் குற்றவாளிகளை கைது செய்து தமிழகத்திற்கு அழைத்து வந்துள்ளனர்.

அதேபோல் தமிழகத்தில் 150 சைபர் குற்றவாளிகளை நாங்கள் ‘ஆபரேஷன் திரைநீக்கு’ என்ற பெயரில் மாவட்ட வாரியாக கைது செய்துள்ளோம். எனவே தடை செய்யப்பட்ட பிறகும் சைபர் மோசடிகள் அனுப்பும் எஸ்எம்எஸ் லிங்க்களை யாரும் தங்களது செல்போனில் பதிவிறக்க வேண்டாம். ஸ்மார்ட் செல்போன்கள் பயன்படுத்தும் பொதுமக்கள் தேவையில்லாத செயல்போன் செயலிகளை பதிவிறக்க வேண்டும். இவ்வாறு கூடுதல் டிஜிபி சந்தீப் மிட்டல் தெரிவித்துள்ளார்.

நகர்ப்புற மற்றும் கிராமப்புற பகுதிகளில் ஆன்லைன் மோசடி

அச்சுறுத்தல் அதிகரித்துள்ளது. பிஷிங் இணைப்புகள், போலி டெலிவரிகள் மற்றும் போலி வங்கி எச்சரிக்கைகள் மூலம் மோசடி செய்பவர்கள் பொதுமக்களை குறிவைத்து பணம் பறிக்கும் நிகழ்வு தற்போது

அதிகமாயுள்ளது.