Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பெண் பணியாளர்களுக்கு பாலியல் தொல்லை தந்த பிடிஓ பணி விடுவிப்பு: கலெக்டர் அதிரடி

நாகர்கோவில்: குமரி மாவட்டம் திருவட்டார் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பிடிஓ வாக பணியாற்றியவர் சயீத் உசேன். இவர் திருவட்டாரில் சுமார் 1 வருடமாக பணியாற்றியபோது பெண் பணியாளர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக வட்டார வளர்ச்சி அலுவலர், இயக்குநருக்கு பெண் பணியாளர்கள் ஒட்டுமொத்தமாக புகார்கள் அளித்தனர். அதன் மீது விசாரணை நடைபெற்று வந்தது. அவர் மீது நடவடிக்கை எடுக்க ஊரக வளர்ச்சி துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். இதனை தொடர்ந்து சயீத் உசேன் திருவட்டாரில் இருந்து மேல்புறம் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அங்கும் பெண் பணியாளர்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.

இது அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இது தொடர்பாகவும் புகார்கள் உயர் அதிகாரிகளுக்கு சென்றன. இந்தநிலையில் மேல்புறம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இருந்து 10 நாட்களில் அவரை ராஜாக்கமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு பணி இடமாறுதல் செய்து கலெக்டர் உத்தரவிட்டார். இந்தநிலையில் மாதர் சங்கத்தினர் இது தொடர்பாக குமரி மாவட்ட கலெக்டரிடம் அளித்த புகாரில், பெண் பணியாளர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அதிகாரி மீது நடவடிக்கை எடுக்காமல் அவரை பாதுகாக்கும் வகையில் இடமாறுதல் செய்யப்பட்டது தொடர்பாக கேள்வி எழுப்பினர்.

இது தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க உதவி திட்ட அதிகாரிக்கு கலெக்டர் அழகுமீனா உத்தரவிட்டார். மேல்புறம் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு மண்டல அதிகாரியாக உள்ள உதவி திட்ட அதிகாரி (ஹவுசிங்) இது தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கையை கலெக்டரிடம் கொடுத்துள்ளார். இதனை தொடர்ந்து சயீத் உசேனை பணியில் இருந்து விடுவிப்பு செய்து கலெக்டர் அழகுமீனா உத்தரவிட்டார். அரசு துறை அலுவலகங்களில் பெண்களுக்கு நேரும் பாலியல் தொல்லைகளை விசாரிக்கும் குழு விசாரணை நடத்தி அறிக்கை அளித்து அதன் அடிப்படையில் சயீத் உசேன் மீது மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.