Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

‘‘ஒரு கிராம் டெலிவரி செய்தால் 500 ரூபாய் கமிஷன்”; போதை பொருள் சப்ளை செய்த கும்பல் தலைவன் கைது

தண்டையார்பேட்டை: குறுக்கு வழியில் கோடீஸ்வரராக ஆசைப்பட்டு போதை பொருள் சப்ளை செய்த ஆந்திர மாநிலத்தை சேர்ந்த போதை பொருள் கும்பல் தலைவன் கைது செய்யப்பட்டுள்ளார். இவரிடம் இருந்து 5 கிராம் மெத்தம்பெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம் பழைய குண்டுகல் பகுதியை சேர்ந்தவர் முதாசீர் (30). இவர், கடந்த ஆண்டு மெத்தம்பெட்டமைன் என்ற போதை பொருள் பதுக்கிவைத்து சென்னை மற்றும் புறநகர் பகுதியில் விற்பனை செய்து வந்தார். தகவலின்பேரில் போலீசார் இவரை பிடிக்க சென்றபோது‌ தலைமறைவானார். அப்போது, இவரது கூட்டாளிகளான மகேஷ், பரூக், மிதுன், காதர் மொய்தீன், தீபன் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

தலைமறைவாக இருந்த முதாசீரை பிடிக்க வடக்கு கடற்கரை போலீசார் தனிப்படை அமைத்து தேடினர். இந்நிலையில் நேற்று ஆந்திர மாநிலத்தில் பதுங்கி இருந்த முதாசீரை போலீசார் கைது செய்தனர். பின்னர், வடக்கு கடற்கரை காவல் நிலையம் அழைத்து வந்து நடத்திய விசாரணையில், முதாசீர் மீது சென்னை ஆயிரம்விளக்கு, நந்தம்பாக்கம், எழும்பூர் ஆகிய காவல்நிலையங்களில் போதை பொருள் சப்ளை செய்தது தொடர்பாக வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்தது. மேலும் சென்னை செங்குன்றத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வந்தார். இவர், குறுக்கு வழியில் கோடீஸ்வரராக வேண்டும் என்ற எண்ணத்தில் போதை பொருள் விற்பனையில் இறங்கியுள்ளார்.

கூட்டாளிகளை சேர்த்துக்கொண்டு போதை பொருள் விற்பனையில் ஈடுபட்டுள்ளார். ஒரு கிராம் பாக்கெட் மெத்தம்பெட்டமைன் என்ற போதை பொருளை டெலிவரி செய்தால் 500 ரூபாய் கமிஷன் கொடுத்துள்ளார். வடமாநில போதை பொருள் கும்பலிடமிருந்து போதை பொருட்களை வாங்கி வந்து ஓட்டலில் நடக்கும் பார்ட்டிகள், பொறியாளர்கள் தங்கியிருக்கும் இடங்களை குறிவைத்து இவரது கும்பல் போதை பொருட்களை விற்பனை செய்து வந்துள்ளது தெரியவந்தது. இவரிடம் இருந்து 5 கிராம் மெத்தம்பெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து கைது செய்யப்பட்ட முதாசீரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.